வருது வருது.... வருமானவரி விதிப்பில் மாற்றம் வருது!
குறைந்த பட்ச வரி விதிப்பு முறை, அதிக அளவில் வரி வசூல் என்ற தாரக மந்திரத்தை வரும் நிதி ஆண்டுகளில் மத்திய அரசு கையில் எடுக்கப்போகிறது.
டெல்லி: இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால், குறைந்த பட்ச வரி விதிப்பு முறை, அதிக அளவில் வரி வசூல் என்ற தாரக மந்திரத்தை வரும் நிதி ஆண்டுகளில் மத்திய அரசு கையில் எடுக்கப்போகிறது.
மற்ற நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் ஒரே மாதிரியான வருமான வரி விகிதங்கள் இல்லை. இரண்டு லட்சம் வரையிலும் வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
ஆனால், அதற்கு மேலும் ஐந்து லட்சம் வரையிலும் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதமும், ஐந்து லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரையில் வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவிகிதமும் பத்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 30 சதவிகிமும் வருமான வரி விதிக்கப்படுகிறது.
வரிஏய்ப்பு
வருமான வரிவிகிதங்கள் இவ்வாறு மாறுபட்டு இருப்பதால் தான் நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் வரி செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர். கூடவே, மத்திய அரசிற்கு வரவேண்டிய வருவாய் வேறு வழிகளில் சென்றுவிடுகின்றன.
பொருளாதார வளர்ச்சி
இதனால், மக்களுக்கு முறையாக பயன்படக்கூடிய மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கள் ஏற்படுகின்றது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பொருளாதார வளர்ச்சியும் மத்திய அரசு எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி அடைவதில் தாமதம் ஏற்படுகிறது.
வரிவிகிதம் குறையும்
இதனை உணர்ந்தே மத்திய அரசும் விரைவில் அனைத்துவிதமான நேரடி வரிவிகிதங்களையும் மிகக்குறைந்த அளவு வரி விகிதங்களாக குறைக்க ஆயத்தமாகிவருகிறது. வரி விகிதங்களை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றையும் கடந்த மாதம் பிரதமர் மோடி அமைத்தார்.
மகிழ்ச்சியான செய்தி
இந்தக் குழுவானது விரைவில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான திட்டத்தை அறிவிக்கும் என்றும் இத்திட்டமானது வரும் 2019ம் நிதி ஆண்டில் செயல்பாட்டிற்கு வரக்கூடும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நலத்திட்டங்கள்
வரி விகிதங்களை குறைப்பதால் நாட்டில் உள்ள பெருவாரியான மக்களை வரி விதிப்பிற்கு உட்படுத்தமுடியும். அவ்வாறு செய்வதால் நேரடி வருவாயும் பெருகும். மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தமுடியும்.
வரி வருவாய் அதிகரிக்கும்
தற்போது இந்தியாவின் மக்கள் தொகையானது சுமார் 130 கோடியாகும். இவர்களில் சுமார் 4.5 சதவிகிதம் பேர்தான் அதாவது 6 கோடி பேர்கள்தான் வருமான வரி செலுத்துபவர்களாக உள்ளனர். வருமான வரிவிகிதங்களை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மிகக் குறைந்த விகிதங்களில் அமல்படுத்தினால் இன்னும் அதிக அளவில் மக்கள் வருமான வரி செலுத்த முன்வருவார்கள். கூடவே மத்திய அரசிற்கு வரவேண்டிய வருவாயும் அதிகரிக்கும்.
வரி வருவாய் அதிகரிப்பு
தற்போதைய சூழலில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் சுமார் 20 சதவிகிதம் அளவிற்கு விவசாய வருவாய்க்கு வரி விலக்காக சென்றுவிடுகிறது. இது இனி வரும் காலங்களிலும் தொடரும் என்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவரும் ஏற்றுக்கொள்வர்
இதுபற்றி கருத்து தெரிவித்த பிஎம்ஆர் சட்ட ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான முகேஷ் பட்டானி, இது ஒரு நீண்டகால நோக்கில் செயல்படுத்தப்படிவேண்டிய திட்டமாகும். எனவே இதனை வலுவானதாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், யதார்த்தமாகவும் இருக்கும் வகையில் திட்டத்தை அமைக்க வேண்டியது அவசியமாகும், என்றார்.