எடப்பாடி அறிவிப்புகள் செல்லாது.. அதிமுக 3ம் இடம் வரக் காரணம் என்ன? எஸ்பி வேலுமணி சொன்ன வார்த்தை!
சென்னை: எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் நடவடிக்கைகள் செல்லாது என்று அதிமுக எம்எல்ஏ எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறிய எஸ்பி வேலுமணி, அதிமுக பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக மீண்டும் பிளவுபட்டிருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் கட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இவர்கள் மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகி வருகிறது. இந்த பக்கம் எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ-க்கள் சபாநாயரிடம் சட்டசபைக் குழு தலைவர் மற்றும் கொறடா குறித்து கடிதம் அளித்துள்ளனர்.

அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் விவாதித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்படலாம் என்று குரல்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ப முக்குலத்தோர், வன்னியர் மற்றும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
விஜயபாஸ்கர், சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகிய மூவர் தலைமையை ஏற்றிருப்பதால், அடுத்தக் கட்டமாக என்ன நடக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எடப்பாடி பழனிசாமி பலரையும் கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். ஒரு இயக்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த நாளில் இருந்து எந்த முடிவும் எடுக்க முடியாது.
அதுதான் சட்டம்.. குறிப்பாக யாரையும் நீக்குவதோ, நியமிப்பதோ செல்லாது. மே 5ஆம் தேதியே கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டது. அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி தோல்வி குறித்து ஆலோசிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று நாங்கள் கூறினோம். ஆரோக்கியமான முடிவை எடுக்காமல், நீக்கும் முடிவினை எடுத்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுகள் செல்லாது என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம். தேவையில்லாத குழப்பங்களை தவிர்த்துவிட்டு, பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பதே நோக்கம். அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும், பலமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி எல்லாரையும் போங்க போங்க போங என்று நீக்கி கொண்டே இருக்கிறார். இதனை நிறுத்திவிட்டு, வாங்க வாங்க வாங்க என்று பிரிந்து சென்றவர்களை அழைக்க வேண்டும். திமுக எதிர்ப்பு நமக்கு முக்கியம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்கள், அப்படியே பதவியில் தொடர்வார்கள். சட்டசபை அமைப்பு தனி.. கட்சி அமைப்பு தனி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications