தங்கம் மீதான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை குறைக்க நிதி ஆயோக் பரிந்துரை - அரசு குறைக்குமா
Subscribe to Oneindia Tamil
தங்கத்துக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க கடன் பத்திர திட்டம் போன்றவற்றிலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என அரசுக்கு அந்த அமைப்பு அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு பொருளாதார விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் அமைப்பாக நிதி ஆயோக் இயங்கி வருகிறது.

நிதி ஆயோக் குழுக் கூட்டம் அதன் முதன்மை ஆலோசகர் ரத்தன் பி வட்டாள் தலைமையில் நடைபெற்றது.இது தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தற்பொழுது நடைமுறையில் இருக்கும் 10 சதவீத வரி மற்றும் 3 சதவீத ஜிஎஸ்டி வரி போன்றவற்றை குறைக்கவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- தங்கத்தை பணமாக்கும் திட்டம் மற்றும் தங்க கடன் பத்திர திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய தங்கம் சேமிப்பு திட்டத்தை வங்கிகளில் அறிமுகப் படுத்தவேண்டும் என இந்தக் குழு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. தங்கத்துக்கான ஆணையம் ஒன்றை அமைக்கவேண்டும் எனவும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
- கடந்த காலங்களில் சுங்க வரியைக் குறைத்தததன் மூலம் தங்கத்தைக் கடத்துவது குறைந்ததோடு வரிகளைப் பெறுவதும் எளிதானது. எனவே தங்கத்துக்கான சுங்க வரியை முடிந்த அளவுக்கு அரசு குறைக்கவேண்டும். அதே போல தங்கத்தை ஏற்றுமதி செய்யும்பொழுது சுங்க வரியோடு சேர்த்து விதிக்கப்படும் 3 சதவீத ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஐஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும். ரூ.20 லட்சம்வரை ஜிஎஸ்டி செலுத்தவேண்டியதில்லை என்ற உச்சபட்ச வரம்பும் மாற்றியமைக்கப்படவேண்டும்.
- தங்க நகைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் சேவைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாக குறைக்கவேண்டும்.
- நீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து தங்கம் சார்ந்த நிதி ஆதாரங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும். கமாடிட்டி பரிவர்த்தனை வரியிலிருந்து தங்கத்துக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
- தங்கத்தை பணமாக்கும் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த முறையில் தங்கத்தைப் பெறும் கிளைகளை வங்கிகள் அதிகரிக்க வேண்டும். ஒரு கிராம் நிறையிலான தங்கத்தைக்கூட இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த தங்கத்தை வேறு எவருக்கும் வங்கிகள் பரிமாற்றம் செய்யக் கூடாது. தங்கம் சேமிப்புக் கணக்கு என்ற திட்டத்தைத் தொடங்கி வங்கி கணக்குப் புத்தகங்கள் வழங்கப்படவேண்டும்.
- மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வகையில் தங்கத்துக்கென தனியாக ஆணையம் அமைக்கப்படவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2018-19 மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்துவதற்கான வலுவான அடித்தளமாக இந்த அறிக்கையின் பரிந்துரைகள் இருக்கும் எனவும் நிதி ஆயோக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications