மீண்டும் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை – மறுபடியும் பெட்ரோல், டீசல் விலை உயரும்?
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து சரிந்து வந்த கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 45 டாலருக்கு கீழ் சென்றது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டன.

இந்நிலையில், திடீரென உயர ஆரம்பித்த கச்சா எண்ணெய் இந்த ஆண்டின் உச்ச விலையான 62 டாலரை எட்டியுள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தொய்வு நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் திடீரென உயர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, லிபியாவில் கடந்த திங்கட்கிழமையன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையும், பாக்தாத் பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஒதுக்காவிட்டால் கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என குர்திஸ்தான் அரசு எச்சரித்திருப்பதும் விலை உயர்வுக்கு சாதகமாக அமைந்ததாக பெட்ரோமேட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications