ஆன்லைனில் ஆடைகள் வாங்குவதில் பெண்களை விட ஆண்களே அதிகம்.... பிளிப்கார்ட் சொல்லுது!
ஆன்லைனில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் ஷாப்பிங் செய்கின்றனர் என்பது பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் இணையதளம் ஒன்றின் சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
டெல்லி: 2016ஆம் ஆண்டில் ஆன்லைன் ஷாப்பிங்கை மேற்கொண்டவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் என்று பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வே தெரிவித்துள்ளது. பொருட்கள் வாங்குவதில் பெண்கள் முருகக்கடவுள் என்றால் ஆண்கள் பிள்ளையாராய் மாறி ஜெயித்துள்ளனர்.
மணி பர்ஸ்ல பணத்தை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் கிளம்புவது என்றாலே பெண்களுக்கு பிடித்தமான விசயம். அதுவும் கடை கடையாக ஏறி இறங்கி, மணி கணக்கில் பொருட்களை வாங்கி குவிப்பார்கள். அவர்களுடன் துணைக்கு செல்லும், அப்பா, கணவர் பாடுதான் படு திண்டாட்டம்.
முருகக் கடவுள் போல இவர்கள் கடை கடையாக ஏறி இறங்கி பொருட்களை வாங்கினாலும் பிள்ளையாரைப் போல உட்கார்ந்த இடத்தில் இருந்தே பொருட்களை வாங்கி குவித்துள்ளனர் ஆண்கள்.
பிளிப்கார்ட் சர்வே
ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் பிளிப்கார்ட் நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் 2016ஆம் ஆண்டில் என்ன பொருட்கள் ,எந்த பகுதியில் அதிகம் விற்பனையாகி இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பிளிப்டிரென்ட்ஸ் 2016 என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
100 மில்லியன் இந்தியர்கள்
2016 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 15 வரை 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் இணையதளத்தில் ஷாப்பிங் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
மொபைல் போன்
இந்த ஆய்வின் படி, அதிக அளவில் மொபைல் போன் வாங்கவே பிளிப்கார்ட் இணையதளத்தை தேர்வு செய்துள்ளனர். 80 சதவிகிதம் பேர் மொபைல்போன் வாங்க பிளிப்கார்ட் இணையதளத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஷாப்பிங் செய்ய ஆர்வம்
ஆடைகள், எலக்ரானிக் பொருட்கள் , காலணிகள் போன்றவற்றை 60% ஆண்களே அதிகம் ஷாப்பிங் செய்வதாக தெரியவந்துள்ளது. மேலும் 24 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் அதிகளவில் ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்களே அதிகம்
15 சதவிகித வாடிக்கையாளர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு கூறியுள்ளது. வீட்டில் அமர்ந்து கொண்டு ஷாப்பிங் செய்வதில் பெண்களை விட ஆண்களே அதிகம் ஷாப்பிங் செய்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.