சீனாவுக்கு செக்.. மோடியிடம் முக்கிய பாயிண்டை உடைத்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக இந்தியா-அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறார். எனவே இந்த சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
மார்க் ரூபியோ சாதாரண ஆள் கிடையாது.. உலக நாடுகளின் வெளியுறவுத்துறை விஷயங்களை அமெரிக்காவுக்கு சாதகமாக முடிக்கும் அளவுக்கு கை தேர்ந்தவர். இப்பேர்பட்டவர் இந்தியா வந்திருப்பது, வேறு எந்த நாடுகளை காட்டிலும் சீனாவுக்குதான் முக்கியமானதாக இருந்தது. காரணம் சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு வந்து சென்றிருந்தார். இதனை தொடர்ந்து கொஞ்ச நாட்களிலேயே ரூபியோ இந்தியா வந்திருக்கிறார்.

மோடியுடன் சந்திப்பு
மோடியுடனான சந்திப்பில் இந்தியத் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும், அமெரிக்கத் தரப்பில் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் மற்றும் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் ஆலிசன் ஹூக்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் (Critical Technologies) ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
முக்கியமான மேட்டர்
இந்தச் சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், இந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது குறித்தும் விவாதித்தோம். அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியா!" என்று அவர் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம்
இதில் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது என்று செர்ஜியோ கூறியிருப்பதுதான் கவனிக்கத்தக்கது.
சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் என்பது உலக அரசியலிலும், சர்வதேசப் பாதுகாப்பிலும் இன்று மிக முக்கியமான ஒரு புவிசார் அரசியல் கொள்கையாகும்.
இந்தியப் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் இணையும் உலக வரைபடத்தின் மிக முக்கியமான கடல் பகுதியாகும். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இப்பிராந்தியத்தில் அமைந்துள்ளன. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி (சுமார் 60% கப்பல் போக்குவரத்து) இந்த வழியில்தான் நடக்கிறது.
கடல் போக்குவரத்து
சர்வதேசக் கடல் வழிப் பாதைகளில் எந்த ஒரு குறிப்பிட்ட நாடும் உதாரணமாக சீனா ஆதிக்கம் செலுத்தக் கூடாது. அனைத்து நாடுகளின் வர்த்தகக் கப்பல்களும், விமானங்களும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாகச் சென்று வர வேண்டும்.
சர்வதேசக் கடல்சார் சட்டங்களை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும். பெரிய நாடுகள் தங்களின் ராணுவ பலத்தைக் காட்டி சிறிய நாடுகளின் கடல் எல்லையை ஆக்கிரமிக்கக் கூடாது என்பதுதான் இதன் நோக்கம்.
சீனாவின் நடவடிக்கை
அமெரிக்காவும் இந்தியாவும் இந்த வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. சீனாதான் இதற்கான காரணம்.
தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. செயற்கைத் தீவுகளை அமைப்பது, பிற நாடுகளின் கடல் எல்லைகளை ஆக்கிரமிப்பது போன்ற செயல்களில் சீனா ஈடுபடுவதால், அதைத் தடுத்து நிறுத்தவே இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கின.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தப் பங்கமும் வராமல் தடுக்க அமெரிக்கா போன்ற நாடுகளின் நட்பு தேவைப்படுகிறது. இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் பாதுகாப்பாக இருக்க இந்தோ-பசிபிக் பிராந்தியம் எப்போதும் 'திறந்த' நிலையில் இருப்பது அவசியமாகும். அந்த வகையில் செர்ஜியோவின் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications