ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம்
மாநிலங்களுடன் கருத்தொற்றுமை ஏற்பட்டவுடன் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்துக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
டெல்லி: மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பதற்கு ஆவலாக உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் இது பற்றி கலந்து பேசி வருகிறோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றம் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கோடு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை செயல்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவை துறைகள் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் பெட்ரோல் மற்றம் டீசல் ஆகியவை மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைக்கப்படவில்லை.
இந்த வரி விதிப்பு வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரப்பட்டால் அவற்றின் விலை வெகுவாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் விலைவாசி கட்டுக்குள் வருவதால் ஏழை நடுத்தர மக்களின் கவலைகள் குறைய வாய்ப்பும் உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவிற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிருப்தி எழுந்தாலும், வெகுவிரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அதற்கு ஏற்றார் போலவே, ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பது பற்றி பேச்சு வார்த்தை மட்டுமே இருக்கும். கூட்டம் முடிந்தவுடன் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள்.
பெட்ரோல், டீசல் மற்றும் மதுவகைகள் ஆகியவை மட்டும் மாநில அரசுகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் வாட் வரிவிதிப்பு வட்டத்திற்குள்ளேயே கழற்றி விடப்பட்டன. கூடவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜூலை 16ஆம் தேதி முதல் சர்வதேச சச்சா எண்ணை விலையைப் பொருத்து தினசரி விலையை நிர்ணயம் செய்யும் முறைக்கு மாற்றி அமைத்துவிட்டனர்.
இதனால், கடந்த ஜூலை 1ம் தேதி அன்று தலை நகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரொல் 63,09 ரூபாய்க்கும், டீசல் 53.33 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச சந்தை நிலவரத்தை பொருத்து விலையை மாற்றி அமைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு மாறிய பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வேகமாக ஏற ஆரம்பித்து இன்றைய நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 69.27 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 58.65 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வருகிறது.
தற்போது பெரும்பாலான பொருட்களின் ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு முறை மாற்றி அமைக்கப்பட்டு விட்டாலும். இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவில்லையே என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
ஏனென்றால் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி விதிப்ப வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டால்தான் விலைவாசியும் அதைத் தொடர்ந்து பணவீக்க விகிதமும் குறையும் என்பது பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும்.
பெட்ரோல் மீது 12 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் டெல்லியில் 38.10 ரூபாயாக லிட்டர் பெட்ரோல் விற்கப்படும்.தற்போது ஜிஎஸ்டி 0, 5, 12, 18 மற்றும் 18 சதவீதங்களாக உள்ளது. இதில் பெட்ரோல் டீசல் மீது 12 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வாய்ப்பே இல்லை. எனவே அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பான 28 சதவீதம் வரியை பெட்ரோலுக்கு விதித்தால் டெல்லியில் லிட்டர் பெட்ரோல் 43.44 ரூபாய் என விற்கப்படும். இதுவே டீசல் 48.88 ரூபாயாக விற்கப்படும். இதன் மூலம் ஏழை,நடுத்தர மக்கள் அதிகம் பயணடைவார்கள்.
இந்நிலையில், செவ்வாய்கிழமையன்ற ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தில் தெலுங்கு தேச உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்கையில், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பதற்கு ஆவலாக உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் இது பற்றி கலந்து பேசி வருகிறோம். ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்ட உடன் நிச்சயமாக பெட்ரோல், டீசல் ஆகியவையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படும், என்று தெரிவித்தார்.