அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்!
தெஹ்ரான்: அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. எனவே ஈரான் தனது வான் எல்லையை மூடியிருக்கிறது.
அணுகுண்டு தயாரிப்பதற்காக ஈரான் யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இஸ்ரேலோடு சேர்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்த நிலையில், போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ஈரானுக்கு டிரம்ப் 24 மணி நேரம் டைம் கொடுத்திருக்கிறார். இந்த நேரமும் முடிவடிடைய இருக்கிறது. எனவே, ட்ரம்ப் தனது வார இறுதி நியூ ஜெர்சி பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார். இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குல் நடத்தப்படக்கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் மீது புதிய சுற்று ராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாகத் தயாராகி வருகிறது என்று, அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் ஊடகம் செய்தியை வெளியிட்டிருக்கிறது. எனினும், இதற்கான இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது. அதேபோல செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் அவர்கள் வைத்திருக்கக் கூடாது என்பதில் ட்ரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்படத் தவறினால், ராணுவத் தாக்குதல் உட்பட அனைத்து விருப்பங்களும் ட்ரம்பின் வசம் உள்ளன” என்று எச்சரித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்காவும் ஈரானும் நேரடித் தாக்குதல்களைத் தவிர்த்து வந்தன. பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால அமைதி ஒப்பந்தத்திற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே தற்போது மீண்டும் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தங்கள் மீது புதிய தாக்குதல்களை நடத்தினால், அது ஒட்டுமொத்தப் பிராந்தியப் போராக மாறும் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை எச்சரித்துள்ளது. தங்களின் ஆயுதப் படைகள் எதிரிகளின் எந்தவொரு முட்டாள்தனமான நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications