முடங்கிய தபால் துறை... அவதிப்படும் பொது மக்கள்

7வது ஊதிய குழுவை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும். 50 சதவீதம் பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் திட்டத்தையும், ஆட்குறைப்பு செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறி்ச்சோடின. இதனால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தபால் நிலையங்களில் கடித போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிடக்கின்றன. இதனால் தபால்கள் மலை போல குவிய தொடங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த போராட்டத்தில் 2300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தபால் அலுவலக சங்க தலைவர் மைக்கேல் ராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் வலுவடைந்து வருவதால் பொதுமக்களுக்கு வரவேண்டிய முக்கிய கடிதங்கள், பாலிசி விபரங்கள், சேமிப்பு கணக்குகள், வேலை வாய்புக்கான உத்தரவுகள், மற்றும் அவற்றுக்கு தபால் நிலையங்கள் மூலம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் அடியோடு முடங்கியுள்ளன.
இதனால் பொதுமக்கள் திகைப்பில் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வங்கிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தின. இதனால் வங்கி பணிகள் அடியோடு முடங்கி ஏடிஎம்மில் கூட பணம் எடுக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications