ஆர்பிஐ சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த அரசு முடிவு - மோசமான விளைவு ஏற்படும் என ப.சிதம்பரம் எச்சரிக்கை
அரசின் உத்தரவுகளை அமல்படுத்த ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 7ஐ பயன்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை அமல்படுத்த ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 7ஐ பயன்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணபுழக்கத்தை அதிகரிப்பது, வங்கிகள் மீதான அழுத்தத்தை குறைப்பது, பொருளாதார வளர்ச்சியை பெருக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகிறது.
ஆனால் ரிசர்வ் வங்கி இதற்கு செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக ஆர்பிஐ சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் 83 ஆண்டு கால வரலாற்றில் எந்த அரசும் சட்டப்பிரிவு - 7 ஐ பயன்படுத்தியதில்லை.
ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்
கடந்த வாரம் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான வேறுபாடுகளைப் பற்றிப் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான வீரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் மத்திய அரசு தலையிடுவதாக குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தைக் குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும். மத்திய வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள் அதிகாரங்களைக் குறைத்ததற்காக ஒரு நாள் வருத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார் வீரல் ஆச்சார்யா.
மோசமான நடவடிக்கைக்கு காரணம்
வங்கிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க மூலதன உதவி, வங்கி திவால் சட்டம் போன்ற நடவடிக்கைகள் அரசு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முந்தைய ஆட்சிக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் மோசமான நடவடிக்கைகளின் காரணமாகத்தான் இப்போது வாராக் கடன் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்
ஆர்பிஐ செக்சன் 7
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்பிஐ சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் 83 ஆண்டு கால வரலாற்றில் எந்த அரசும் சட்டப்பிரிவு 7 ஐ பயன்படுத்தியதில்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
|
மோசமான விளைவு
இது குறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், சட்டப்பிரிவு 7 ஐ பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என கூறியுள்ளார்.
|
என்ன காரணம்
மேலும் 1991, 1997, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பிரிவு 7 பயன்படுத்தப்பட்டதில்லை என்றும் ரிசர்வ் வங்கி மீது சட்டப்பிரிவு 7-ஐ பயன்படுத்துவது வரலாற்றில் நடந்திராத ஒன்று என்றும் கூறியுள்ளார்.
பொருளாதார நிலை
தற்போது ரிசர்வ் வங்கி மீது சட்டப்பிரிவு 7ஐபயன்படுத்த என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம், பொருளாதார நிலை குறித்து உண்மையான நிலவரத்தை மத்திய அரசு மறைக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.