ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!
இந்திய ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஊழியர்கள் அனைவருக்கும் வருடாந்திர சம்பள உயர்வை அறிவித்துள்ளது. டெக் துறையில் திரும்பும் பக்கமெல்லாம் பணிநீக்க அறிவிப்புகளுக்கு மத்தியில், டிசிஎஸ் வெளியிட்டுள்ள இந்த சம்பள உயர்வு ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த சம்பள உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சம்பள உயர்வின் சதவீதம் இன்னும் வெளியிடப்படவில்லை. டிசிஎஸ் தற்போது டேட்டா சென்டர் வர்த்தகத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் நிலையில் செலவுகளை கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆயினும் ஊழியர்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் சம்பள உயர்வை தேதி மாறாமல் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் பல நிறுவனங்கள் சம்பள உயர்வை தள்ளி வைப்பது, சம்பள உயர்வை தராமல் இருப்பது போன்ற கடுமையான முடிவுகளை எடுக்கிறது. ஆனால் டிசிஎஸ் தொடர்ந்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வேரியபிள் பே தொகையை அளித்து வருகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவளத் பிரிவு தலைவர் சுதீப் குன்னுமல் கூறுகையில் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் ஏப்ரல் 1 முதல் வருடாந்திர சம்பள உயர்வு அமல்படுத்தப்படும். எதிர்காலத்துக்கு தயாரான பணியாளர் குழுவை உருவாக்கும் வகையில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
டிசிஎஸ் ஏப்ரல் 9 அன்று தனது காலாண்டு நிதியியல் முடிவுகளை வெளியிட்ட போது, 2026-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் தனது மொத்த ஊழியர் எண்ணிக்கை சுமார் 2,300 பேர் அதிகரித்துள்ளது உள்ளது மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை மார்ச் காலாண்டு முடிவில் 584,519 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 149 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெண் ஊழியர்கள் பங்கீடு சுமார் 35.1 சதவீதம் உள்ளது.
கடந்த ஆண்டு சம்பள உயர்வு எப்படி இருந்தது?
கடந்த செப்டம்பர் மாதம் டிசிஎஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவித்தபோது, பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்வு வழங்கப்பட்டது. சிறந்த செயல்பாடு கொண்ட ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு, இதே போக்கைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடாந்திர சம்பள உயர்வு டிசிஎஸ் ஊழியர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தொழில் துறை சவால்களுக்கு மத்தியில் இந்த உயர்வு ஊழியர்களுக்கு நிம்மதியை அளிக்கும். இருப்பினும், உயர்வின் சதவீதம் இன்னும் அறிவிக்கப்படாததால், ஒவ்வொரு டிசிஎஸ் ஊழியர்களும் சம்பள உயர்வுக்கான விபரத்தை தங்களுடைய ஈமெயில் இன்பாக்ஸ்-ல் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பள உயர்வு அறிவித்தால், அது மற்ற ஐடி நிறுவனங்களுக்கு இதற்கு இணையாக சம்பள உயர்வை அளிக்க முயற்சி செய்யும்.












Click it and Unblock the Notifications