செல்லாத ரூபாய் நோட்டு பிரச்சினை - டோல்கேட் இழப்பீடு ரூ. 1000 கோடியாம்!
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்காமல் விடப்பட்ட சுங்கக்கட்டணம் ரூ. 1000கோடியை விரைவில் வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சரகம் மத்திய அமைச்சரவையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி நவம்பர் 8ஆம் தேதியன்று இரவு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது நள்ளிரவு முதல் செல்லாது என்றும் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
மோடி அறிவித்த நாள் முதலே நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருந்தன.

இதனால் ஏற்படும் நேர விரயத்தை தடுக்கும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால் ஏற்படும் இழப்பீட்டு தொகையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகரகத்திற்கு மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளித்தது. இந்த நிலையில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 2 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்காமல் விட்டதில் ரூ. 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு சாலை பராமரிப்பாளர்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்த இழப்பீட்டு தொகையை வழங்குவது பற்றி மத்திய அமைச்சரவைக்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிதின் கட்கரி, உடனடியாக அந்த பணத்தை தங்களுக்கு அளிக்குமாறு சாலை பராமரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளர்.
சுங்கக்கட்டணம் வசூலிக்காத காரணத்தால் சாலை பராமரிப்பு, பணியாளர்களுக்கு ஊதியம் போன்றவைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக கடனாக பெற்ற தொகைக்கு வட்டி கட்டி வருவதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையரகம் கூறியுள்ளது.
தங்களுக்கான இழப்பீட்டு தொகை எவ்வளவு என்று சுங்கக்கட்டணம் வசூலிப்பவர்கள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வருவதாகவும் அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக நிதிகட்கரி கூறியுள்ளார். விரைவில் இது 30 சதவிகிதமாக உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செல்லாத நோட்டு அறிவிப்பு செய்யப்பட்ட நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு 2 லட்சம் மின்னணு சுங்கக்கட்டண கார்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications