4 நிறுவனங்களாக உடையும் வேதாந்தா.. மெகா திட்டத்துடன் களமிறங்கும் அனில் அகர்வால்
அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா லிமிடெட் நிறுவனம், தனது மெகா டீமெர்ஜர் திட்டத்தை மே 1, 2026 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி வேதாந்தா நிறுவனம் நான்கு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட உள்ளது. இந்த முடிவு வேதாந்தா குழும முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கிடைக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீமெர்ஜர் திட்டம் என்ன?
டீமெர்ஜர் என்பது ஒரு நிறுவனத்தை இரண்டு அல்லது பல தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பதாகும். வேதாந்தா நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் தனது அலுமினியம், மின்சாரம், எண்ணெய் & எரிவாயு மற்றும் இரும்பு & எஃகு ஆகிய தொழில் பிரிவுகளை தனித்தனி நிறுவனங்களாக பிரித்து தனித்தனியாக நிர்வாகம் செய்ய உள்ளது.

எப்படி முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரித்த பின்பு, தற்போது ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து பட்டியலிட திட்டமிட்டு வருகிறாரோ, இதேபோன்ற திட்டத்தை தான் தற்போது அனில் அகர்வால் கையில் எடுத்துள்ளார்.
பங்குச்சந்தையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை இப்படி பிரித்து தனித்தனியாக பட்டியலிடுவதன் முலம் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கும் பெருகும் வாய்ப்பை பெறும். உதாரணமாக 1000 ரூபாய் மதிப்புடைய ஒரு பங்கு 4 ஆக உடையும் போது பங்கு மதிப்பு 250 ரூபாயாக குறையும். இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப பங்குகளின் விலை வேகமாக வளர்ச்சி அடையும். இதேபோல் ஒன்றாக இருக்கும் போது ஒரு பிரிவின் செயல்பாடு மொத்த குழுமத்தையும் பாதிக்கும் என்பதால் தற்போது பெரும்பாலான வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் டீமெர்ஜர் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் வேதாந்தா டீமெர்ஜர் பிறகு, ஒவ்வொரு பங்குதாரரும் இந்த நான்கு புதிய நிறுவனங்களின் பங்குகளையும் 1:1 விகிதத்தில் பெறுவார்கள். அதாவது, வேதாந்தாவின் ஒரு பங்குக்கு ஒவ்வொரு புதிய நிறுவனத்திலும் ஒரு பங்கு கிடைக்கும்.
புதிய நான்கு நிறுவனங்கள்
1. வேதாந்தா அலுமினியம் மெட்டல் லிமிடெட் (Vedanta Aluminium Metal Limited - VAML) - அலுமினியம் தொழில் பிரிவு
2. தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் (Talwandi Sabo Power Limited - TSPL) - மெர்ச்சண்ட் பவர் (மின்சாரம்) தொழில் பிரிவு
3. மால்கோ எனர்ஜி லிமிடெட் (Malco Energy Limited - MEL) - எண்ணெய் & எரிவாயு தொழில் பிரிவு
4. வேதாந்தா ஐரன் அண்ட் ஸ்டீல் லிமிடெட் (Vedanta Iron and Steel Limited - VISL) - இரும்பு & எஃகு தொழில் பிரிவு
இந்த டீமெர்ஜரில், பங்குதாரர்கள் தங்கள் வைத்துள்ள வேதாந்தா பங்குகளுக்கு ஏற்ப இந்த நான்கு நிறுவனங்களின் பங்குகளையும் பெறுவார்கள். இது பங்குதாரர்களுக்கு தனித்தனி நிறுவனங்களின் வளர்ச்சியை தனித்தனியாக அனுபவிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.
BALCO பங்குகள் VAML-க்கு மாற்றம்
வேதாந்தா நிறுவனம் தனது பாரத் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (BALCO) நிறுவனத்தில் உள்ள பங்குகளை Vedanta Aluminium Metal Ltd (VAML)-க்கு மாற்ற முடிவு செய்துள்ளது. BALCO-வின் கடந்த நிதியாண்டு வருமானம் ரு.15,909 கோடியாக இருந்தது. இது வேதாந்தா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் சுமார் 10 சதவீதம் ஆகும்.
BALCO-வின் நிகர மதிப்பு ரூ.12,088 கோடியாக உள்ளது, இது வேதாந்தாவின் ஒட்டுமொத்த நிகர மதிப்பில் 39 சதவீதம் ஆகும். இந்த பங்கு மாற்ற ஒப்பந்தம் ஏப்ரல் 30, 2026-க்குள் கையொப்பமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குதாரர்களுக்கு ரெக்கார்ட் தேதி நிர்ணயம்
வேதாந்தா நிறுவனம் பங்குதாரர்களை தீர்மானிக்கும் ரெக்கார்ட் தேதியை மே 1 ஆக நிர்ணயம் செய்துள்ளது. மே 1ஆம் தேதியின்படி, யார் யார் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு புதிய நிறுவனங்களின் பங்குகள் வழங்கப்படும்.
வேதாந்தா போன்ற பெரிய நிறுவனம் நான்கு தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பது, ஒவ்வொரு பிரிவும் தனித்தனியாக வளர வழிவகுக்கும். இது பங்குதாரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உதாரணமாக, அலுமினியம் துறையில் நல்ல வளர்ச்சி இருந்தால் அதன் பங்குகளின் மதிப்பு தனியாக உயரும். இதேபோல் மற்ற துறைகளும் தனித்தனியாக செயல்படும். இதேவேளையில் அலுமினியம் துறையில் தொய்வு ஏற்பட்டால் புதிதாக பிரிக்கப்பட்ட Vedanta Aluminium Metal Limited நிறுவனத்தை மட்டுமே பாதிக்கும். மற்ற நிறுவனங்களை பாதிக்காது.












Click it and Unblock the Notifications