இந்தியா பாகிஸ்தான் இடையே உச்சத்தில் பதற்றம்.. ஷேர் மார்க்கெட் என்னவாகும்? ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
சென்னை: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்திய ஷேர் மார்க்கெட் எப்படி இருக்கும்.. இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தால் பங்குச்சந்தையில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது இந்தியாவின் மேஜர் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் பதற்றம்
இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் பதற்றத்தால் பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாகச் சரிந்தது. இருப்பினும், இந்தியப் பங்குச்சந்தை பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இது தங்கம் விலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
ஆனந்த் சீனிவாசன்
இந்தக் கேள்விக்குப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "முதலில் இந்தத் தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்குச் சும்மா இருக்க மாட்டோம் என்பதைக் காட்டியுள்ளோம்.. தக்கப் பதிலடி கொடுப்போம் என்பதைக் காட்டியுள்ளோம்.
பாகிஸ்தான்
இப்போது இது பங்குச்சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கேட்டால்.. பாகிஸ்தான் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்தே அது இருக்கும். பாகிஸ்தான் சும்மா பேசிவிட்டு விட்டுவிடுகிறார்களா.. இல்லை தாக்குதல் நடத்துவார்களா என்பதைப் பொறுத்தே இருக்கும்.
நாங்கள் பதிலடியாகக் குண்டு போடுவோம் என்கிறது பாகிஸ்தான். மேலும் பாகிஸ்தான் தனது வான்வழியையும் மொத்தமாக 48 மணி நேரத்திற்கு மூடியிருக்கிறது. அதாவது எந்த விமானம் அங்குச் சென்றாலும் சுட்டு வீழ்த்தப்படும் என்கிறார்கள். ஏற்கனவே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் போகாது. போவதைத் தாக்குதலாகவே பார்ப்பார்கள்.
பங்குச்சந்தை
இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், மியூச்சுவல் பண்டுகளுக்கு பங்குச்சந்தையை விழவிடக்கூடாது என்ற அறிவுறுத்தல் நேற்றே போய் இருக்கும். இதன் காரணமாகவே அவர்கள் தங்கள் முதலீட்டை அதிகரித்திருப்பார்கள். இந்த நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும்..
அடுத்து என்ன நடக்கும்!
சும்மா இதற்குப் பதிலடி எனப் பாகிஸ்தான் எல்லையில் சிறிய தாக்குதலை மட்டும் நடத்தி, அதை அப்படியே விட்டுவிட்டால் சர்வதேச முதலீட்டாளர்கள் இதை சைலெண்டாக விட்டுவிடுவார்கள். அதேநேரம் பாகிஸ்தான் பெரியதாகத் தாக்குதல் நடத்தினால்.. எதாவது நகரத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினால் அப்போது மட்டுமே சந்தையில் தாக்கம் பெரியளவில் இருக்கும். அதாவது பாகிஸ்தான் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பங்குச்சந்தையில் டிரெண்ட் இருக்கும்.
இப்போதைக்கு மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் வாங்கும். சர்வதேச முதலீட்டாளர்கள் கொஞ்சம் விற்பார்கள்.. அப்படியே இருக்கும். அதேநேரம் பாகிஸ்தான் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவைத் தாக்கினால் ஷேர் மார்க்கெட்டில் பெரிய பாதிப்பு இருக்கலாம்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications