இந்திரா காந்தி, மன்மோகன் சிங் கூட இப்படி செய்யவில்லை.. மோடி மட்டும் ஏன்?
பிரதமர் நரேந்திர மோடி மே 10ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்திய மக்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேண்டுகோள் விடுத்தார். "அடுத்த ஒரு ஆண்டு காலம் நாட்டில் அனைவரும் தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள்" என்று அவர் கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிகழ்ச்சியில் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். இந்த இரண்டு அறிவுறுத்தல்களை இது "போர் கால சிக்கன நடவடிக்கை" என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சாதாரண மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

35 ஆண்டுகளில் எந்த பிரதமரும் செய்யாத அதிரடி
இந்திய வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் பொதுமக்களிடம் நேரடியாக "தங்கம் வாங்க வேண்டாம்" என்று கேட்டதில்லை. 1973-ம் ஆண்டு எண்ணெய் நெருக்கடியின் போது இந்திரா காந்தியும் சரி, 1991-ம் ஆண்டு வெளிநாட்டு செலாவணி நெருக்கடியின் போது பி.வி.நரசிம்மராவ், 2013-ம் ஆண்டு "டேப்பர் டான்ட்ரம்" நெருக்கடியின் போது மன்மோகன் சிங் ஆகியோர் எதிர்கொண்ட கடுமையான சூழல்களிலும் இத்தகைய நேரடி வேண்டுகோள் விடுக்கப்படவில்லை.
35 ஆண்டுகளில் யாரும் வைக்காத கோரிக்கையை மோடி வைத்துள்ளார்.
தங்கம் மீது டார்கெட் வைப்பது ஏன்?
இந்தியா 2026 நிதியாண்டில் தங்கம் இறக்குமதிக்காக மட்டும் 71.98 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகம். வெள்ளி இறக்குமதி 12 பில்லியன் டாலர் அதிகரித்து 150 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இரண்டு உலோகங்களும் சேர்ந்து 84 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி வெளியேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெரும் செலவு நாட்டின் வெளிநாட்டு மாற்று நாணயக் கையிருப்பை கணிசமாக பாதித்துள்ளது. எனவே தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் நிறுத்தினால் அந்நிய செலாவணி பாதுகாப்பு பெரிதும் வலுப்பெறும் என்று அரசு நம்புகிறது.
அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
பிப்ரவரி 2026-ல் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 728.49 பில்லியன் டாலராக உச்சத்தில் இருந்தது. மே 1, 2026 அன்று அது 690.69 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 10 வாரங்களில் மட்டும் 38 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது.
ரூபாய் மதிப்பு கடந்த 12 மாதங்களில் 10.36 சதவீதம் வீழ்ச்சியடைந்து, ஏப்ரல் 30 அன்று 95.33 என்ற வரலாறு காணாத தாழ்வைத் தொட்டது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) மார்ச் 2026-ல் மட்டும் 1.12 லட்சம் கோடி ரூபாய் (12.1 பில்லியன் டாலர்) முதலீட்டாக வெளியேற்றினர். 2026 நிதியாண்டு முழுவதும் 16.6 பில்லியன் டாலர் வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது. இது 1991-க்குப் பிறகு மிக மோசமான நிலையாகும்.
ரூபாய் மதிப்பு, FII முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றத்திற்கு எவ்விதமான தொடர்பும் தங்கத்திற்கு இல்லை.
1991 மற்றும் 2013 நெருக்கடிகளுடன் ஒப்பீடு
1991-ல் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 1.2 பில்லியன் டாலராகக் குறைந்து, 67 டன் தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
2013-ல் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது தங்க வரியை 4 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தினார். ஆனால் அப்போது கூட மக்களிடம் நேரடியாக "தங்கம் வாங்க வேண்டாம்" என்று கேட்கப்படவில்லை.
2026-ல் மோடி ஒரு படி மேலே சென்று மக்களிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது 1991-க்குப் பிறகு மிக மோசமான நிலை என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
என்ன காரணம்?
பிரதமர் மோடி தலைமையிலான அரசும் வரியை உயர்த்தி தங்கம் இறக்குமதியை குறைக்கலாம், ஆனால் இது மிகவும் மெதுவாக செயல்படும் வழி. மத்திய அரசுக்கு தற்போது உடனடியாக தங்கம் - வெள்ளி, எரிபொருள் செலவுகளை குறைப்பதில் மாற்றம் நடக்க வேண்டும் என்பதால் மோடி இத்தகைய கோரிக்கையை வைத்துள்ளார்.
ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னால் சுமார் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட உள்ளனர் என்பது தான் தற்போது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.















Click it and Unblock the Notifications