ஓவராக பேசிய ஓலா ஓனர்.. மரண அடி கொடுத்த பொதுமக்கள்.. ஒரே நாளில் பல கோடி நஷ்டம்! என்னாச்சு
டெல்லி: ஓலா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சரிந்ததால்.. இன்று ஒரே நாளில் அதன் உரிமையாளர்களுக்குப் பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஓலா நிறுவனத்தின் பங்குகள் பெரியளவில் சரிய என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நம் அனைவருக்கும் ஓலா குறித்துத் தெரிந்து இருக்கும். முதலில் ரைட் ஹெய்லிங் நிறுவனமாகத் தனது சேவையைத் தொடங்கியது ஓலா.. ரைட் ஹெய்லிங் என்றால் என்ன எனக் குழம்ப வேண்டாம்.. நாம் டாக்சி, ஆட்டோ புக் செய்ய உதவும் செயலியைத் தான் ரைட் ஹெய்லிங் செயலி என்பார்கள்.

ஓலா: வெளிநாடுகளில் இதற்குப் பல செயலிகள் இருந்தாலும் இந்தியாவுக்கு ஏற்ற ரைட் ஹெய்லிங் செயலியாக ஓலா உருவெடுத்தது. குறிப்பாகப் பயணம் முடிந்த உடன் காசை கையிலேயே தரலாம் என்ற ஆப்ஷன் இந்தியர்களுக்கே ஏற்ற ஒன்றாக இருந்தது. அதற்கு முன்பு வரை கிரெட்டி அல்லது டெபிட் கார்ட் மூலம் ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த முடியும் என்று இருந்த நிலையில், இந்த புதிய முறை இந்தியர்களிடையே ஹிட் அடித்தது.
இந்த ஐடியாவுக்கு காரணமாக இருந்தவர் ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால்.. இதன் காரணமாகவே இந்தியாவில் ஓலா பிரபலமாகத் தொடங்கியது. ஓலாவின் இந்த ஐடியாவையே அதன் பிறகு பல நிறுவனங்களும் பாலோ செய்தது. இப்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் ஓலா சேவை இருக்கிறது. ரைட் ஹெய்லிங்கில் வெற்றிகரமாக மாற தொடங்கிய போது பவிஷ் அகர்வால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் நுழைய முடிவு செய்தார்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: இதற்கான முதலீடுகளை ஈர்த்த அவர் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தார். ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தார். இதற்கு அப்போதே மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நார்மல் ஸ்கூட்டர்களை விட அதிகம் என்றாலும் அதன் பிறகு பெட்ரோல் போடத் தேவையில்லை என்பதால் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டினர்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே புக்கிங் குவிந்தது. கொஞ்சம் தாமதம் ஆனாலும் ஓலா ஸ்கூட்டர்கள் டெலிவரியும் தொடங்கப்பட்டன. இருப்பினும், தொடக்கத்திலேயே உற்பத்தியில் பெரிய குளறுபடிகள் எழுந்தன. இது ஓலாவுக்கு முதல் கெட்ட பெயரை வாங்கி தந்தது. இதற்கிடையே ஓலா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
புகார்கள்: ஆனால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது. ஓலா ஸ்கூட்டர்களில் பழுது ஏற்படும் போது அதை அந்த நிறுவனம் சரி செய்வதில்லை என்ற விமர்சனம் சில மாதங்களுக்கு முன்பே எழுந்தது. அப்போது அது சர்ச்சையாகவில்லை. ஆனால், சமீப காலமாக இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கர்மா இது தொடர்பான படத்தைப் பதிவிட்டு, "இந்திய மக்களுக்குக் குரல் இருக்கிறதா? அவர்கள் இந்தளவுக்கு மோசமாக நடத்தப்பட வேண்டுமா.. இரு சக்கர வாகனங்கள் என்பது பல தினசரி கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம். இப்படி மோசமாக நடத்தக்கூடாது" என்று சர்வீஸ் சென்டர் பிரச்சினை குறித்து விமர்சித்து இருந்தார். அவரது ட்வீட்டுக்கு கீழ் பலரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தைப் புலம்பினர்.
சர்ச்சை: இதற்கு பவிஷ் அகர்வால் கொடுத்த பதில் தான் சர்ச்சையாக வெடித்தது. அதாவது அவர், "அவ்வளவு அக்கறை இருந்தால்.. நீங்கள் வந்து எங்களுக்கு உதவுங்கள். யாரோ பணம் கொடுப்பதால் தான் நீங்கள் இந்த டீவீட் செய்துள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் வந்து உதவினால் அவர்கள் தந்ததை விட அதிகப் பணம் தருகிறேன். உதவ முடியாது என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்கவும்.. உண்மையான பிரச்சனைகளைச் சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்கள் சேவை நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்துகிறோம்" என்று பதில் கொடுத்திருந்தார்.
குனால் கர்மா இதற்குப் பதிலாக சில ட்வீட்களை போல, பவிஷ் அகர்வால் மேலும் மேலும் குணால் கர்மாவை டார்கெட் செய்து விமர்சிக்க ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஓலா ஸ்கூட்டர்களுக்கு உரிய சர்வீஸ் கிடைக்கவில்லை என்று மக்கள் கோபத்தில் இருந்த நிலையில், பவிஷ் அகர்வாலின் இந்த திமிர் பேச்சும் சர்ச்சையானது.
நஷ்டம்: இதுவே இன்று பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது ரூ.100க்கு ஓலா பங்குகள் வர்த்தகமான நிலையில், அது மளமளவெனச் சரிந்து ஒரு கட்டத்தில் ரூ.89.55 வரை சென்றது. கடைசியாக ரூ.90.71க்கு வர்த்தகமானது. அதாவது இன்று ஒரே நாளில் சுமார் 8% வரை ஓலா பங்குகளின் விலை சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பல நூறு கோடியை இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications