ஊர்முழுக்க அழைப்பு..தட புடல் விருந்துடன் முறைப்படி நடந்த திருமணம்..மணமக்களை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
சண்டிகர்: ஹரியானாவில் தடல்புடல் விருந்துடன் நாய்களுக்கு நடத்தப்பட்ட திருமணம் பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பான படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள பாலம் பகுதியில் இருக்கும் ஜில் சிங் காலனியில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக 100- க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டன. தடல் புடல் விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தடபுடலாக நடந்த திருமணம்
இதனால், மண வீட்டிற்கு பலரும் புதுபுது ஆடைகளுடன் உற்சாகமாக வந்தனர். ஆனால், மணமக்கள் தான் இங்கு வேற... இரண்டு நாய்களுக்குக்கு நடைபெற்ற இந்த திருமணம் தான் இத்தகைய உற்சாகத்துடன் நடைபெற்று இருக்கிறது. ஷேரு (ஆண் நாய்) ஸ்வீட்டி (பெண் நாய்) என்ற நாய்களுக்கும் இந்த திருமணம் நடைபெற்றது. இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் மணமக்களாக இருந்த இரண்டு நாய்களையும் ஆசிர்வதித்தனர்.

மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவில்
இந்த வினோத திருமணம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இதுகுறித்து ஸ்வீட்டி என்ற பெண் நாயின் உரிமையாளர்கள்தான் இந்த தடல் புடல் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். பார்ப்பவர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவில் நடத்தப்பட்ட திருமணம் குறித்து சவிதா என்ற பெண் கூறியதாவது:-எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால், வீட்டில் செல்லப் பிள்ளை போல இந்த நாயை வளர்த்து வந்தோம்.

பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த இந்த நாய்க்கு ஸ்வீட்டி என்று பெயர் வைத்து பாசத்துடன் வளர்த்து வந்தோம். இந்த நாய் தற்போது பெரிதாகிவிட்டதால் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தோம். அதன்படி, மனிட்டா என்பவர் வளர்த்து வந்த ஆண் நாயான ஷோருவுக்கு திருமணம் நடத்துவது என பேசி முடித்தோம். குழந்தை இல்லாத எங்களுக்கு இந்த திருமணம் நடத்தி வைத்தது பெரும் மகிழ்ச்சி அளித்தது.

எங்களுக்கு குழந்தை இல்லாததால்
சிலர் காவல்துறையிடம் கூறி எங்களை சிறையில் தள்ள இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுக்கு குழந்தை இல்லாததால் எங்களின் ஸ்வீட்டி (நாய்)க்கு நடைபெற்ற திருமணம் மனதில் மகிழ்ச்சியை தருகிறது" என்றார். அதேபோல், ஆண் நாயை வளர்த்து வந்த மணிடா என்பவர் கூறுகையில், ''கடந்த 8 ஆண்டுகளாக ஷேரு என்ற இந்த நாயை வளர்த்து வருகிறோம்.

எங்கள் விருப்பப்படி இந்த திருமணம்
எங்கள் குழந்தையை போல இந்த நாயை நாங்கள் பாவித்து வந்தோம். நாய்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து எதார்த்தமாக பேசினோம். கடைசியில் இது தீவிரமாக நடந்து விட்டது. நாய்களுக்கு நடத்தி வைக்கப்படும் இந்த திருமணம் சிலருக்கு விருப்பம் உள்ளது. சிலருக்கு விருப்பம் இல்லை. அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் விருப்பப்படி மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications