செம.. இனி விண்வெளிக்கும் பறக்கலாம்! சோதனைகளை சாதனையாக்கிய ககன்யான் திட்டம்! பாரசூட் சோதனை வெற்றி
சண்டிகர்: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்துவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மிக முக்கியமான பாரசூட் சோதனை இன்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி என்றாலே ரஷ்யாதான். விண்வெளிக்கு முதலில் மனிதனை அனுப்பியது, பிற உயிரினங்களை அனுப்பியது, பெண்களை அனுப்பியது என அடுக்கடுக்கான வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர்தான் ரஷ்யா. அந்த வகையில் இந்தியாவிலிருந்து ராகேஷ் சர்மாவையும் ரஷ்யா பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. இந்த உத்வேகத்தில் இந்தியா சுயமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவெடுத்து அதற்கான பணியில் இறங்கியது.

கடந்த 2006ம் ஆண்டு இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அப்போதைய மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு 2009ம் ஆண்டு அப்ரூவல் கிடைத்த நிலையில் நம்முடைய விஞ்ஞானிகள் வேலையில் இறங்கினர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பயிற்சி வேண்டும். ராகேஷ் சர்மா பறந்து நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டதே. எனவே ரஷ்யாவிடம் உதவி கோரியது இஸ்ரோ. இதனையடுத்து இஸ்ரோவுக்கும் ரஷ்ய விண்வெளி அமைப்பான க்ளாவ்கோஸ்மாஸுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி இந்திய விமானப்படையின் ஒரு குரூப் கேப்டன் மற்றும் 3 விங் கமாண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயிற்சியும் 2021ம் ஆண்டு நிறைவடைந்துவிட்டது. தற்போது ககன்யான் விண்கலத்தை ரெடி செய்வது மட்டுமே பாக்கி. இதுவும் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு அமைப்பும் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அதன்படி ககன்யானை சுமந்த செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க் III ராக்கெட்டின் விகாஸ் என்ஜின் சமீபத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
பூமியிலிருந்து ஒரு பொருள் மேலே போக வேண்டும் எனில் 11 கி.மீ வேகத்தில் பயணித்தால் போதுமானது. ஆனால் இது அந்த பொருளின் வெயிட்டை பொருத்து மாறுபடும். ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் அமர்ந்து செல்லும் விண்கலம் மட்டும் 3,700 கி.கி எடை கொண்டது. அதேபோல இதை சுமந்து செல்லும் மார்க் III ராக்கெட் 6.3 லட்சம் கி.கி எடை இருக்கும். எனவே இவ்வளவு எடையை என்ஜின் எப்படி மேலே கொண்டு செல்லும் என்று சோதனை செய்து பார்க்கப்பட்டது.
காவல்கிணறு அருகேயுள்ள, மகேந்திரகிரி இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் விகாஸ் இன்ஜின் அற்புதமான தனது திறனை வெளிகாட்டியிருக்கிறது. இதனையடுத்து இன்று சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்ட்டிக் ஆய்வகத்தில் ரயில் பாதையில் ராக்கெட் பிளேட் சோதனையும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரயில்வே ட்ராக்கில் ககன்யான் விண்கலம் எடைகொண்ட ஒரு பொருளை வைத்து அதை வேகமாக ஓடவிட்டு பின்னர் திடீரென பாராசூட்டை திறக்க வைத்தனர். இதனால் அந்த பொருள் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது. இந்த சோதனையானது விண்வெளியிலிருந்து வீரர்கள் பூமிக்கு திரும்புகையில் பத்திரமாக தரையிறக்க பயன்படும். ஏனெனில் ககன்யான் விண்கலத்திலும் இதே மாதிரி பாராசூட் பொருத்தப்பட்டிருக்கும்.
தற்போது இந்த சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியர்கள் விண்வெளிக்கு செல்லும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications