தப்புமா பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு.. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எம்எல்ஏக்களை வளைக்க பாஜக வலை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றியதோடு, டெல்லியை கடந்து ஆம் ஆத்மி தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தியது.
இந்த சூழலில் பாஜக ஆபரேசன் தாமரையை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த முயற்சித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை பாஜக அணுகியதாக குற்றம்சாட்டினார்.
பஞ்சாப் பல்கலைக்கழக மாணவிகள் விடிய விடிய போராட்டம்- விசாரணைக்கு அரசு உத்தரவு
ஆபரேஷன் தாமரை
அதேபோல் பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் ஹர்பால்சிங் சீமா கூறுகையில், ஆபரேஷன் தாமரை திட்டத்தை பஞ்சாப்பில் செயல்படுத்த பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பெரும்பான்மையை நிரூபிப்போம்
ஆனால், பஞ்சாபில் தேர்தல் நேரத்தில் கூட, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு லஞ்சம் கொடுக்க பெரும் பணம் மற்றும் பிற பொருட்களை வைத்திருந்தனர், ஆனால் மக்கள் அவர்களை நிராகரித்து, ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையை ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து காப்போம். பஞ்சாப் மக்கள் முன் இந்த நம்பிக்கையை சட்டப்பூர்வமாக முன்வைக்க, செப்டம்பர் 22ம் தேதி மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளோம். அதில் நாங்கள் எங்களின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று தெரிவித்தார்.
டெல்லி அரசு
சில வாரங்களுக்கு முன் இதேபோல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. குஜராத் தேர்தல் நெருங்கி வரும்ம் சூழலில், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன்மூலம் பாஜக திட்டத்தை முறியடித்துள்ளோம் என்பதை மக்களுக்கு காட்டுவகையில் இந்த நடவடிக்கை அமையும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பகவந்த் மான் வீடியோ வெளியீடு
இந்த நிலையில் ஆபரேசன் தாமரையை முறியடிக்கும் வகையில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களாக, பஞ்சாபில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசை கவிழ்க்க, பாஜகவினர் எப்படி ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை அணுக முயன்றனர், லஞ்சம் கொடுக்க முயன்றார்கள் என்பதை மக்கள் பார்த்திருப்பார்கள்.