ஹரியானா தேர்தலில் 4 முனைப் போட்டி! காங்கிரஸைப் போல ஆம் ஆத்மியும் 90 தொகுதிகளிலும் தனித்தே ஆட்டம்!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம்; ஆம் ஆத்மி கட்சிக்கு ஹரியானாவில் பலமே இல்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது. இதற்கு பதிலடியாக ஹரியானா சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளிலுமே ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் 4 முனைப் போட்டி உருவாக இருக்கிறது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானாவில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள்.

2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப் பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றி தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தது. இந்திய தேசிய லோக் தளம் ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது.
இதனையடுத்து பாஜக, ஜேஜேபி, சுயேட்சைகள் இணைந்து ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ஜேஜேபி தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வரானார். ஆனால் பாஜகவுடனான கூட்டணியை அண்மையில் துஷ்யந்த் சவுதாலா முறித்துக் கொண்டார். இதனால் முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவி விலக புதிய முதல்வராக நயாப் சிங் பதவி வகித்து வருகிறார். இருப்பினும் பாஜகவுக்கு ஆதரவு அளித்த சுயேட்சைகளும் காங்கிரஸ் பக்கம் தாவிவிட்ட நிலையில் தற்போதைய பாஜக அரசு அந்தரத்தில்தான் ஊசலாடுகிறது.
இந்த நிலையில் ஹரியானா சட்டசபை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. ஹரியானாவைப் பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் உட்கட்சி மோதல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை சமாளிக்கவே இரு கட்சிகளின் மேலிடமும் பெரும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் பஞ்சாப் மாநிலத்தைப் போல ஆம் ஆத்மி வளர்ந்துவிடுமோ என்கிற அச்சம் காங்கிரஸ் கட்சிக்கு இயல்பாகவே இருக்கிறது. இதனால் ஹரியானால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்காமலேயே தனித்தே போட்டியிடுவோம் என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு பதிலடியாக ஆம் ஆத்மி கட்சியும் 90 தொகுதிகளிலும் நாங்களும் தனித்தே போட்டியிடுவோம் என்கிறது. ஜேஜேபியைப் பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸுடன் கை கோர்த்து இந்தியா கூட்டணியில் இணையவும் இல்லை. இதனால் தற்போதைய சூழ்நிலையில் ஹரியானா சட்டசபை தேர்தலில 4 முனைப் போட்டிக்கான சாத்தியங்களே அதிகம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications