“பொஸசிவ்” - டிவி மெக்கானிக் மீது “ஆசிட்” வீச்சு.. பஞ்சாப் பெண் கைது! 2 காரணங்கள்.. எது உண்மை?
சண்டிகர்: பஞ்சாபில் டிவி மெக்கானிக் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது மகளை ஆசிட் வீசிய பெண் பின் தொடர்ந்த நிலையில் தன் மீது ஆசிட் வீசி சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை அடுத்த ஜமல்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர் சிங் (56). தொலைக்காட்சி பழுது நீக்கும் பணி செய்து வரும் இவர் அதே பகுதியில் டிவி ரிப்பேர் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஜஸ்வீர் சிங்கின் கடைக்கு ஆசிட் பாட்டிலுடன் வந்த பெண் ஒருவர் அவர் மீது வீசிச் சென்றார். வலியில் கதறி துடித்த அவர் மீட்கப்பட்டு CMCH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆசிட் வீசிய பெண்
இந்த தாக்குதலில் அவரது முகம், முதுகு, கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜஸ்வீர் சிங்கின் மீது ஆசிட் வீசியது சந்தா தேவி(38) என்ற பெண் என்றும், கோபால் (33) என்ற அவரது நண்பர் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்து இருக்கிறது. இதுகுறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளதாவது, சந்தா உண்மையில் ஜஸ்பிரித் சிங்கின் மகளையே குறிவைத்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவேறு காரணங்கள்
சந்தா தேவி மற்றும் கோபால் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசாரால், இந்த தாக்குதலுக்கான உண்மை காரணம் என்னவென்று உறுதிபடுத்த முடியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் இது தொடர்பாக இருவேறு காரணங்கள் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கான காரணத்தை சந்தா ஒருவிதமாகவும் ஜஸ்வீர் சிங் வேறுவிதமாகவும் கூறியுள்ளனர்.
ஜஸ்வீன் சிங் விளக்கம்
ஜஸ்வீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தன்னை கொலை செய்ய கோபால் சந்தாவை அனுப்பியதாக கூறியுள்ளார். கோபாலுடன் தான் பழகி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சச்சரவு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், அதன் பின்னர் கோபால் தன்னை பலமுறை மிரட்டி வந்ததாகவும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
சந்தா தேவி விளக்கம்
தாக்கிய பெண் அளித்துள்ள விளக்கத்தில், தன்னுடைய கணவரிடம் இருந்து பிரிந்துவிட்டதாகவும், அதன் பிறகு கோபாலுடன் பழகி வருவதாகவும் கூறி இருக்கிறார். தாக்கப்பட்ட ஜஸ்வீர் சிங்கின் மகள் தன்னை கோபாலுடன் பேச விடாமல் தடுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக அவர் மீது இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறி இருக்கிறார்.