"பூனைக்குட்டி" வெளியே வருகிறது.. பாஜகவில் இணைகிறார் அமரீந்தர் சிங்.. குடியரசு துணை தலைவர் வேட்பாளரா?
அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
சண்டிகர்: பஞ்சாப்பின் அம்ரீந்தர் சிங் குறித்து முக்கிய தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. பாஜகவில் அவர் இணைய போவதாகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அமரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றன.
பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்.. இவருக்கும், சித்துவுக்கு தொடர் மோதல் கட்சிக்குள் இருந்து வந்தது.
இருவருமே தங்கள் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்துக்கு கொண்டு போனார்கள்.. ஆனால், யாராலும் இவர்களின் பனிப்போரை போக்க முடியவில்லை..
பஞ்சாப்: தனிநாடு கோரும் பிரிவினைவாதி சிம்ரஞ்சித் சிங் மான் சங்ரூர் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி!
பனிப்போர்
சித்துவைகூட மேலிடத்தால் சமாளிக்க முடிந்தது.. ஆனால், அமரீந்தர் சிங்கோ தன்னிச்சையாக செயல்படக்கூடியவர் என்பதால், இவரை சோனியா காந்தியாலும்கூட கட்டுப்படுத்த முடியவில்லை.. மாறாக, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்... இதையடுத்து, மேலிடத்தின் அழுத்தம் காரணமாக கடந்த செப்டம்பரில் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அம்ரீந்தர்..
பாஜக
இவர் கட்சியில் இருந்து விலகியதுமே எப்படியும் பாஜகவில்தான் இணைய போகிறார் என்ற தகவல்கள் பரபரத்தன.. காரணம், பதவி விலகிய கையோடு, 3 முறை டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்து பேசியது, பலவித யூகங்களையும், சந்தேகங்களையும் கிளப்பி விட்டது.. ஆனால், பாஜகவில் தான் சேர போவதில்லை என்று அறிவித்தார். அப்போதே, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்... இந்த கட்சி கடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து களமிறங்கி தோல்வியை தழுவியது. பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட அமரிந்தர் சிங் டெபாசிட் இழந்தார்...
துணை குடியரசு தலைவர்
இந்நிலையில், அமரீந்தர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன.. அதாவது தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. மேலும், நடக்க போகும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவை வெற்றி பெறச் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது பாஜக..
ஆபரேஷன்
அதேபோல, குடியரசு துணை தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது.. இந்த குடியரசு துணை தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அமரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த சில நாட்களாகவே அமரீந்தர் சிங்குக்கு உடம்பு சரியில்லை.. முதுகில் ஆபரேஷன் செய்வதற்காக லன்டன் சென்றுள்ளார்.. இவரது உடல்நலம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, போன் செய்து பிரதமர் மோடியும் நலன் விசாரித்திருந்தார்..
பாஜக - கடைசி நாள்
சிகிச்சை முடிந்து அடுத்த வாரம்தான் அமரீந்தர் இந்தியா வருகிறார்.. அவர் இங்கே வந்தவுடன், உடனடியாக பாஜகவில் இணைந்து, தன்னுடைய பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியை, பாஜகவுடன் இணைக்கக்கூடும் என்று தெரிகிறது.. அதற்கு பிறகு, வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வேட்பு மனு தாக்கல் செய்ய, வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்...
பி - டீம்
அன்று கட்சி துவங்கியபோதே, அம்ரீந்தரை தேசதுரோகி என்று காங்கிரஸ் கூறியது.. சிரோமணி அகாலிதளம் கட்சியோ, அம்ரீந்தரை பாஜகவின் பிடீம் என்று வெளிப்படையாகவே விமர்சித்தது.. இப்போது இவர்கள் சொன்னதுதான் நடக்க போகிறது.. பஞ்சாப் காங்கிரஸ் அடையாளமாகவே நீண்ட காலமாக பதிந்துபோனவர் அமரீந்தர் சிங், பாஜகவின் அடையாளத்தை பெறும் முயற்சியில் தற்போது இறங்கி உள்ளார்.. இது எந்த அளவுக்கு சாதகத்தை பெற்று தரும் என்பது இனிமேல்தான் நமக்கு தெரியவரும்..!
ராஜ்யசபா
குடியரசு துணை தலைவர் தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் எம்பிக்கள் மற்றும் நியமன எம்பிக்கள் ஓட்டளிக்க உள்ளனர். போதிய பலம் இருப்பதால், பாஜக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி விடும் என்றே தெரிகிறது.. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மறுபடியும் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் அதிருப்தி தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.