அந்த பேருல ஏதோ இருக்கு.. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் அமரிந்தர் சிங் ராஜா
சண்டிகர்: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அமரிந்தர் சிங் ராஜா பொறுப்பேற்றுள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராகவும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் கேப்டன் அமரிந்தர் சிங் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கும் பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோட் சிங் சித்துவிற்கும் பூசல் வெடித்தது.
இந்த நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அமரிந்தர் சிங்கிடம் இருந்து பறிக்கப்பட்டு நவ்ஜோட் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்பே கட்சியில் குழப்பம்
இதனால், அதிர்ச்சியடைந்த அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகி தலைமைக்கு எதிராக பேசினார். இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். அவருக்கும் நவ்ஜோட் சிங் சித்துவிற்கு மத்தியிலும் கூட பிரச்சனைகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பஞ்சாப் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிலும் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சின்னி அறிவிக்கப்பட்டார்.

தேர்தலில் படுதோல்வி
ஆனால், 5 மாநில தேர்தல்களிலும் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, பஞ்சாபில் இருந்த ஆட்சியையும் ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்தது. இந்த தோல்விக்கு நவ்ஜோட் சிங் சித்துவே காரணம் என்ற குற்றச்சாட்டை அக்கட்சியினர் சுமத்தினர். இதனை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து சித்து ராஜினாமா செய்வதாக இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.

புதிய தலைவர் பொறுப்பேற்பு
இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக அமரீந்தர் சிங் பிரார் ராஜா அறிவிக்கப்பட் நிலையில், இன்று அவர் மாநில தலைவராக பொறுப்பேற்றார். அதேபோல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் செயல்தலைவராக பாரத் பூஷன் அஷு பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பின்போது முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி மேடையில் அவருடன் கலந்துகொண்டார்.

மேடையேறாத சித்து
ஆனால், இந்த விழாவில் பங்கேற்ற நவ்ஜோத் சிங் சித்து மேடையில் ஏறவில்லை. மற்றொரு முன்னாள் மாநில தலைவரான சுனில் ஜாகர் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. கட்சித் தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications