ஹரியானா புதிய முதல்வரானார் நயாப் சிங் சைனி! மனோகர் லால் கட்டாரியாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம்
சண்டிகர்: ஹரியானாவில் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு இன்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து புதிய முதல்வராக 'நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் மெஜாரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையாக மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜனநாயக ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறது.
இதனால் பாஜகவின் ஆட்சி அங்கு கவிழ்ந்தது. இதையடுத்து இன்று முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இந்த கூட்டணி உடைந்ததற்கு லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு சிக்கல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 10 எம்பி தொகுதிகள் இருக்கின்றன. இதில் 5 தொகுதிகளை பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி கேட்டிருக்கிறது. ஆனால் பாஜக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவேதான் கூட்டணி உடைந்திருக்கிறது.
அதே நேரம் கூட்டணி கட்சிகளை சரியாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டும் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மீது இருக்கிறது. இந்நிலையில், சுயேட்சை எம்எல்ஏக்களின் உதவியுடன் பாஜக ஹரியானாவில் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டிருக்கிறது. ஆனால், முதல்வராக கட்டார் தொடரமாட்டார் என்றும், புதிய முதல்வராக 'நயாப் சிங் சைனி' நியமிக்கப்படுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து இன்று மாலையில் பதவியேற்பு விழா நடந்தது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் நயாப் சிங் சைனி முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த வேளையில் மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரியின் காலில் விழுந்து நயாப் சிங் சைனி ஆசீர்வாதம் பெற்றார்.
புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள நயாப் சிங் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவராவார். குருக்ஷேத்ரா எம்பியாக இருக்கும் இவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானாவின் பாஜக மாநில தலைவராக கட்சி நியமித்திருந்தது. கடந்த 1996ம் ஆண்டிலிருந்து சைனி பாஜகவில் பணியாற்றி வருகிறார். 2002ல் அம்பாலாவின் பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். அதன் பின்னர் 2005ம் ஆண்டு அம்பலா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2009ம் ஆண்டு பாஜக மாநில பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2012ல் அம்பலா மாவட்டத்தின் தலைவராகவும் உருவெடுத்தார். 2014ம் ஆண்டு எம்எல்ஏவான அவருக்கு 2016ல் ஹரியானாவில் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. கடைசியாக 2019ம் ஆண்டு குருக்ஷேத்ரா லோக்சபா தொகுதியிருந்து இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மனோகர் லால் கட்டாரின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார். மட்டுமல்லாது குருக்ஷேத்ரா, யமுனாநகர், அம்பாலா, ஹிசார் மற்றும் ரேவாரி மாவட்டங்களில் இவர் சார்ந்திருக்கும் 'சைனி' சமூகத்தின் ஓட்டு வங்கி கணிசமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications