திடீரென வெடித்து சிதறிய பாய்லர்.. ஒரே நொடியில் அரங்கேறிய கொடூரம்.. 100+ தொழிலாளர்கள் படுகாயம்
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று பாய்லர் திடீரென வெடித்து ஏற்பட்ட விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள சில தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்ற புகார் இருந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் நல்ல பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் சிலவற்றில் உரியப் பாதுகாப்பு இருப்பதில்லை.

அதுபோன்ற தொழிற்சாலைகளில் எதிர்பாராத சமயங்களில் மோசமான விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு மோசமான விபத்து தான் இப்போது ஹரியானாவில் நடந்துள்ளது.
பாய்லர் வெடி விபத்து: அங்கே ரேவாரி என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று பாய்லர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், இந்த சம்பவம் நகரின் தருஹேரா பகுதியில் நடந்துள்ளது. நாங்கள் மருத்துவமனைகளுக்கு இந்த விபத்து குறித்துத் தெரிவித்துள்ளோம். தொழிற்சாலையில் காயமடைந்தோரை மீட்க ஆம்புலன்ஸ்களை அனுப்பியுள்ளோம். பலர் காயமடைந்துள்ளனர். ஒருவரது நிலை மிக மோசமாக இருக்கிறது. அவரை உயர் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளோம்" என்றார்.
எங்கே நடந்தது: இரவு 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. 'லைஃப்-லாங் என்ற தொழிற்சாலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அருகே உள்ள மருத்துவர்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தோருக்கு விரைவாகச் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அந்த தொழிற்சாலைக்கு விரைந்தன. மேலும், போலீசார் மற்றும் அம்மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்திற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications