அப்பா மீது அவ்வளவு நம்பிக்கை.. ஆனால் மகள்னு கூட பார்க்காமல் தந்தை கொடுத்த தண்டனை.. உயிரே போச்சே
சண்டிகர்: காதலிப்பதாக வந்த சந்தேகத்தால் பெற்ற மகள் என்று கூட பாராமல் கைகளை கட்டி பாலத்தில் இருந்து கால்வாயில் தள்ளி கொன்றுள்ளார் தந்தை ஒருவர். அதுமட்டுமின்றி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வெளியானதால் தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரை சேர்ந்தவர் சுர்ஜித் சிங். திருமணமானவர். இவருக்கு மனைவி, 5 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு வயது 17 ஆகிறது. இந்நிலையில் தான் சுர்ஜித் சிங்கிற்கு தனது மூத்த மகள் மீது சந்தேகம் எழுந்தது. அவரது நடத்தையை சந்தேகித்தார்.

அதாவது மூத்த மகள் யாரோ ஒருவரை காதலிப்பதாக தந்தை சுர்ஜித் சிங் நினைத்தார். இதுதொடர்பாக அடிக்கடி அவர் தனது மகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த 30 ம் தேதி சுர்ஜித் சிங் தனது மூத்த மகள் மற்றும் மனைவியை பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள கால்வாய்க்கு சென்றார். அங்கு வைத்து மகளின் கையை அவர் கட்டினார். அதன்பிறகு அவரிடம், ‛‛யாரையாவது காதலிக்கிறாயா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமான சுர்ஜித் சிங், ‛‛என்னிடமே ஏமாற்றுகிறாயா?'' எனக்கூறி அந்த மகளை பாலத்தில் இருந்து கீழே ஓடும் கால்வாயில் தள்ளினார். தண்ணீருக்குள் விழுந்த அவரது மகள் அடித்து செல்லப்பட்டார். பக்கத்தில் அவரது தாய் இருந்தாலும் அவரால் உதவி செய்ய முடியவில்லை.
ஏற்கனவே பலமுறை தந்தைக்கும், மகளுக்கும் காதல் விவகாரம் தொடர்பான பிரச்சனை வந்துள்ளது. இதனால் தந்தை தன்னை கொல்லமாட்டார் என்ற நம்பிக்கையில் மகள் இருந்தார். அவரது தாயும் கூட அந்த நம்பிக்கையிலேயே பாலத்தில் நின்று கொண்டிருந்தார். மகளை மிரட்டி திட்டிவிட்டு தனது கணவர் விட்டுவிடுவார் என்று நம்பி கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென்று சுர்ஜித் சிங் கோபமாகி மகளை கால்வாயில் தள்ளி கொன்றுவிட்டார். மேலும் இந்த சம்பவம் அனைத்தையும் அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோ வெளியானது. இதுபற்றி சுர்ஜித் சிங் மீது அவரது இன்னொரு மகளே போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சுர்ஜித் சிங்கை கைது செய்தனர்.
விசாரணையில், ‛‛என் மகள் காதல் செய்து வந்தார். சமீபத்தில் குடும்பத்தினர் சாப்பிடும் உணவில் விஷம் கலந்து அனைவரையும் கொல்ல முயன்றார். நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினோம். பலமுறை காதலிக்க வேண்டாம் என்று கூறி வந்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இதனால் அவளை கால்வாயில் தள்ளி கொன்றுவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பவீந்தர் சிங் கூறுகையில், ‛‛குற்றம்சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகள் ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனை முற்றவே மனைவி, மகளை அழைத்து கொண்டு கால்வாய்க்கு சென்றுள்ளார். அங்கு மகளின் கையை கட்டி கால்வாயில் தள்ளி கொன்றுள்ளார். மொத்த சம்பவத்தையும் அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. '' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications