தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து?காங். எடுத்துள்ள அதிரடி முடிவு
சண்டிகர்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும்
பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைப் பெற தவறியது. இதையடுத்து ஜனநாயக் ஜனதா கட்சி(10) மற்றும் சுயேச்சை எம்எல்ஏகளின்(2) ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
சில மாதங்களாகவே ஹரியானாவில் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்திலுள்ள பல ஆயிரம் விவாசியகள் டெல்லியை முற்றுகையிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுயேச்சை எம்எல்ஏகள் ஆதரவு வாபஸ்
இந்நிலையில், ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர இருப்பதாக ஹரியானா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். மேலும், பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு சுயேச்சை எம்எல்ஏகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
மேலும், "பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளோம். இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டனர், கூட்டணிக் கட்சியிலும் சில எம்எல்ஏகள் இந்க அரசு தான் மிகவும் ஊழல் நிறைந்த அரசு என குற்றஞ்சாட்டுகின்றனர். பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்போது அவர்கள் நிலைப்பாடு தெரியவரும்" என்றார்.

பேரணி
முன்னதாக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர ஏதுவாக ஆளுநர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று பேரணி நடத்தினார். இது குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு நம்பிக்கை இல்லை
மேலும், விவசாய சட்டங்களில் மாநில அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டால் பொதுமக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். ஹரியானாவில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் மார்ச் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. அப்போது பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் காங்கிரஸ் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications