ஆங்கிலேயரை சொந்த மண்ணுக்கே சென்று பழி தீர்த்த வீரனின் கதை தெரியுமா? உத்தம் சிங்கின் வரலாறு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிருந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த 'ஷஹீத் உத்தம் சிங்' குறித்து 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' இணையதளத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை சிறப்பிக்கும் வகையில் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' எனும் கொண்டாட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் இணையதளத்தில் சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் தியாகங்களை மத்திய அரசு தொடர்ந்து எழுதி வருகிறது.
எதிர்வரும் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை சிறப்பிக்கும் வகையில் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' எனும் கொண்டாட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் வீர தீர நாயகன், ஷஹீத் உத்தம் சிங் குறித்து ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் இணையதளத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவில் கொண்டிருப்போர் அனைவருக்கும் இந்த பெயரும் நினைவுக்கு வரும்.
உத்தம் சிங் 1899ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் எனும் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்கள் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உத்தம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது. 1918ல் மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் ஜலியான்வாலாபாக் எனும் இடத்தில் விடுதலைக்காக நடந்த பெரும் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர்.
இந்த பணியில் இவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே மைக்கல் ஓ'ட்வையர் தலைமையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் செத்து மாண்டனர். இந்த சம்பவம் உத்தம் சிங்கை கடுமையாகப் பாதித்துவிட்டது. இச்சம்பவத்திற்குப் பழிவாங்க அமிர்தசரஸ் பொற்கோயிலில் சபதம் பூண்டார். இதனையடுத்து 1924ல் பகத் சிங் மற்றும் அவரது புரட்சிக் குழுவின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு ஆங்கிலேய ஆட்சியை அகற்றுவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை ஒழுங்கமைத்தார்.
சுதந்திரப் போராட்டம் கனல் கொண்டு எரிந்த காலம் அது. 1927ல், அவர் பகத் சிங்கின் உத்தரவின் பேரில் 25 கூட்டாளிகள் மற்றும் ரிவால்வர்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கொண்டு இந்தியா திரும்பினார் உத்தம் சிங். இந்த சம்பவத்தையடுத்து உரிமம் இல்லாத ஆயுதங்களை வைத்திருந்ததற்காக ஆங்கிலேய காவல்துறையினரால் கைதும் செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரிவால்வர்கள், வெடிமருந்துகள் தடைசெய்யப்பட்ட கதர் கட்சித் தாளின் நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் 1931ல் சிறையிலிருந்து விடுதலையானார். ஆனாலும் அவர் தொடர்ந்து காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த கண்காணிப்பிலிருந்து தப்பிக்க பஞ்சாபிலிருந்து காஷ்மீர் சென்றார். பின்னர் காவல்துறையின் கண்ணில் மண்ணைத்தூவி அங்கிருந்து ஜெர்மன் தப்பினார். அங்கு அவருக்கு ஒரு வேலையும் கிடைத்தது. இங்கிருந்தவாறே அவர் மைக்கல் ஓ'ட்வையரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கான ஒரு சரியான நாளையும் அவர் எதிர்ப்பார்த்திருந்தாா்.
அவர் எதிர்பார்த்ததைப்போலவே 1940 மார்ச் 13ம் தேதி அமைந்தது. இந்த நாளில், லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் கிழக்கிந்திய சங்கம் மற்றும் மத்திய ஆசிய சங்கம் (இப்போது ஆசிய விவகாரங்களுக்கான ராயல் சொசைட்டி) ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் மைக்கல் ஓ'ட்வையர் பேசத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் லண்டன் விரைந்தார். கொலை செய்வதற்கு ஒரு துப்பாக்கி தேவை, எனவே அதை பப்பில் உள்ள ராணுவ வீரரிடமிருந்து வாங்கி இருந்தார்.
ரிவால்வார் ஒரு புத்தகத்தின் நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தின் பங்கங்கள் எல்லாம் ரிவால்வரின் வடிவத்தில் வெட்டப்பட்டிருந்தன. கூட்டம் நடந்துகொண்டிருந்தது. பேச்சுகளும் கை தட்டல்களும் தடல் புடலாக இருந்தன. இது 1919 ஜாலியன் வாலாபாக் நினைவை தீப்பொறியிட்டு பற்ற வைத்தது. மக்கள் ஓடி ஒளிய இடம் தேடி கிடைக்காமல் ஒரே கிணற்றில் விழுந்து உயிரிழந்த காட்சிகள் கண் முன் வந்து போயின. உத்தம் சிங்கின் கண்கள் சிவந்தது. சரியான தருணம் வர வேண்டும். அதேபோல கூட்டம் முடிந்தது.
கூட்டம் முடிந்தது. மைக்கல் ஓ'ட்வையர் மேடையை நோக்கி சென்றார். சரியான தருணம் அமைந்துவிட்டது. புத்தகத்திலிருந்து கண் இமைக்கும் நொடியில் துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை மைக்கல் ஓ'ட்வையர்-ஐ நோக்கி சுட்டார் உத்தம் சிங். ஒரு குண்டு ட்வையரின் இதயம் மற்றும் வலது நுரையீரல் வழியாகச் சென்று, அவரை உடனடியாகக் கொன்றது. 2வது குண்டு மற்றவர் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த உடனேயே உத்தம் சிங் கைது செய்யப்பட்டார்.
படுகொலைக்காக 1940 ஜூலை 31 அன்று பென்டோன்வில் உள்ள சிறைச்சாலையில் அவர் தூக்கில் இடப்பட்டார். அன்று மண்ணில் வீழ்ந்த அவரின் உடல் அதன் பின்னர் கோடிக்கணக்கான இந்திய மக்களை குரலாக பூரண சுதந்திரம் எனும் கோரிக்கையை நோக்கி செலுத்த உந்து சக்தியாக மாறியது.