செய்தியாளர்களை சந்திக்காத திரெளபதி முர்மு.. பிரதமர் மோடியை வம்புக்கு இழுத்த யஷ்வந்த் சின்ஹா!
சண்டிகர்: அண்மைக் காலமாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் வெட்கமின்றி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். அதேபோல் தேர்தல் ஆணையம் சார்பாக தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, செல்லும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்களை சந்தித்து பாஜக அரசின் அத்துமீறல்கள் குறித்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை விமர்சித்து வருகிறார். தற்போது ஹரியானா மாநிலம் சென்றுள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்தித்து ஆதரவு கோரினார்.
பிரதமரை வரவேற்காத கேசிஆர்! யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்ற போது வந்த அறிவிப்பு! அமலாக்கத்துறையின் அதிரடி!
பாஜக மீது விமர்சனம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளில், இப்போது போல் அரசு நிறுவனங்களின் பயங்கரவாதத்தை நான் பார்த்ததே இல்லை. வாஹ்பாய் அரசில் 5 ஆண்டுகள் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளேன். அப்போது அரசியல் பிரச்னைகளை சரி செய்வதற்காக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்ற யோசனை கூட எனக்கு வந்ததில்லை. இதுபோன்ற பயன்பாடுகளும் அப்போது இருந்ததில்லை. ஆனால் இப்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இரண்டும் வெட்கமின்றி அப்பட்டமாக பயன்படுத்தப்படுகின்றன.
அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல்
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. 1970களின் நடுப்பகுதியில் எமர்ஜென்சி காலத்தில் கூட இப்போது தேர்தல் நடைபெறவில்லை. நமது நாட்டின் அரசியலமைப்பு இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் அச்சுறுத்தல்களை சந்தித்ததில்லை. பொருளாதாரம் மோசமாக நிர்வகிக்கப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் நீடித்து வருகிறது.
சீனா போல் இந்தியா?
தேர்தலில் வெற்றிபெற ஆளுங்கட்சி, பல மத சமூகத்தினரிடையே வகுப்புவாதத்தைத் தூண்டிவிடும் தீய செயல்களில் இறங்கியிருக்கிறது. இது சமூக அமைதிக்கு மட்டுமின்றி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு கட்சி, ஒரு ஆட்சி என்ற பாஜகவின் திட்டம், ஜனநாயக இந்தியாவை சர்வாதிகார சீனாவைப் பின்பற்றும் நாடாக மாற்றிவிடும். அதனால் பாஜக வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மோடி மீது விமர்சனம்
நான் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து, நமது அரசியலமைப்பு மீதான அச்சுறுத்தல் குறித்து பேசி வருகிறேன். இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கான வேட்பாளர்களிடமிருந்து, தேசத்திற்கான பிரச்னைகள் மற்றும் சவால்கள் குறித்த கருத்துக்கள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியின் வேட்பாளர் இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூட பேசாதது வருத்தமளிக்கிறது.
இதுவரை 8 ஆண்டு பாஜக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்தித்ததில்லை. ஒருவேளை திரெளபதி முர்முவும் பிரதமர் முன்மாதிரியாக கொண்டு செயல்படலாம். திரெளபதி முர்மு மீது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.