பஞ்சாப்: 32 எம்எல்ஏ-க்கள்.. ஆட்சியை கவிழ்ப்பீங்களோ? போதை பொருள் கேஸ்- காங்கிரஸை கதறவிடும் ஆம் ஆத்மி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை கவிழ்ப்போம் என காங்கிரஸ் கட்சி மிரட்டியிருந்தது. இந்த மிரட்டலுக்கு பதிலடியாக மூத்த காங்கிரஸ் தலைவரை போதைப் பொருள் வழக்கில் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டது ஆம் ஆத்மி அரசு.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர் பிரிவினைவாதம் பெரும் தலைவலியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கனடா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருக்கும் சீக்கிய பயங்கரவாதிகள் இந்தியாவுக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கும் குடைச்சலாக இருந்து வருகின்றனர்.

பஞ்சாப்பில் அரசியல் குழப்பம்: இது போதாது என பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் குழப்பங்களும் அரங்கேறத் தொடங்கிவிட்டன. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் "இந்தியா" கூட்டணியில்தான் இருக்கின்றன. ஆனால் இரு கட்சிகளும் பாஜகவைவிட பயங்கரமான எதிரி கட்சிகள் போல முட்டி மோதுகின்றன.
32 எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருக்கின்றனர்; எந்த நேரத்திலும் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என எதிர்க்கட்சித் தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இதனை ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக நிராகரித்து காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது: இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் சுக்பால் கெய்ராவை, 8 ஆண்டுகளுக்கு முந்தைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இன்று பஞ்சாப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெய்ராவின் வீட்டுக்கு பஞ்சாப் போலீசார் கைது செய்ய சென்ற போது கடும் மோதல் ஏற்பட்டது. கெய்ராவின் வீட்டுக்குள் போலீசார் நுழைந்தது முதல் கைது செய்யும் வரை அத்தனை காட்சிகளையும் அவரது மகன் சமூக வலைதளங்களில் லைவ்வாக ஒளிபரப்பு செய்தார். 8 ஆண்டுகளுக்கு முந்தைய கைவிடப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் கெய்ராவை ஆளும் ஆம் ஆத்மி அரசு கைது செய்திருப்பது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் பஞ்சாப்பில் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா கூட்டணி காலி: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆத்மி- காங்கிரஸ் இடையேயான இந்த தொடர் மோதல்களால் இம்மாநிலத்தில் "இந்தியா" கூட்டணி என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது என பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications