ஓவர் பேச்சு.. நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வாய்ப்பூட்டு போட்ட தேர்தல் ஆணையம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநில அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது நவ்ஜோத் சிங் சித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அம்பானி அதானிகளின் தொழில் வளர்ச்சி மேலாளரா என்று கேள்வி விடுத்திருந்தார். இந்நிலையில் இவர் இவரது பேச்சு இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் விதத்தில் இருந்தது என்று கூறி நவ்ஜோத்சிங் சித்து 72 மணிநேரத்துக்குப் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று காலை 10 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த 16-ம் தேதி நவ்ஜோத்சிங் சித்து பிஹாரின் கத்தியார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில்ஈடுபட்டார். பல்ராம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பர்சோய் நகரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சித்து பேசியபோது "பாஜக உங்களை மதரீதியாகப் பிளபுபடுத்த முயற்சிக்கிறது. இங்கு நீங்கள் 64 சதவீதம் பேர் இருக்கிறீர்கள். நீங்கள் சிறுபான்மையினர் இல்லை. பெரும்பான்மையாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக சேர்ந்து வாக்களித்தால் பாஜகவையும், மோடியையும் விரட்ட முடியும். ஆதலால் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் மதத்தை முன்வைத்துப் பேசினார்.
இது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது. இதை கையில் எடுத்த அம்மாவட்ட பாஜகவினர் சித்து மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட கத்தியார் மாவட்ட தேர்தல் அதிகாரி, சித்து மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பர்சோய் நகர போலீஸார் சித்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இதன் பின்னர் சித்து மீதான புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு சித்து பிரச்சாரம் செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
ஆணையத்தின் உத்தரவில், 'பிஹாரின் கத்தியார் மாவட்டம், பராரி, பர்சோய் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சித்து பேசிய வார்த்தைகளை தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்டிக்கிறது. சித்துவின் வார்த்தைகள் தேர்தல் நடத்த விதிமுறைகளுக்கு மாறானவை, ஒழுக்கக்கேடானவை. இந்திய அரசமைப்புச் சட்டம் 324 பிரிவின்படி, அடுத்த 72 மணிநேரத்துக்கு சித்து எந்தவிதமான பொதுக்கூட்டங்கள், பேரணிகள், காட்சிக்கூடங்கள், நேர்காணல்கள், பொதுமக்களிடம் பேசுவது ஆகியவற்றை மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை 23-ம்தேதி காலை 10 மணிமுதல் நடைமுறைக்கு வரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சித்து தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதற்கோ பேட்டி அளிப்பதற்கோ தடை நீடிக்கிறது. இந்த தடை இன்று காலை 10 மணி முதல் அமலுக்கு வந்தது.
லோக்சபா தேர்தல்.. 3ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.. 64.66% வாக்குப்பதிவு!
இதற்கு முன்பு தேர்தல் பிரச்சாரங்களில் சர்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக எழுந்த புகாரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து இருந்தது குறிப்பிட தக்கது