ஹரியானா தேர்தல்: முதல் கட்டமாக 67 வேட்பாளர்களை அறிவித்த பாஜக! முதல்வர் நயாப் சிங் லட்வாவில் போட்டி!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 67 வேட்பாளர்கள் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, லட்வா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வேட்பாளர்கள் அறிவிப்பில் பாஜக மிக மோசமான தடுமாற்றத்தை வெளிப்படுத்தி, எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில் ஹரியானா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அன்று பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) தொடங்குகிறது. இம்மாநிலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12. இறுதி வேட்பாளர் பட்டியல் செப்டம்பர் 16-ந் தேதி வெளியாகும். ஹரியானாவில் அக்டோபர் 1-ந் தேதிதான் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னர் அறிவித்தது. ஆனால் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நெருக்கடியால் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.
ஹரியானாவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலையை அறுவடை செய்வதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஜேஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது.
இந்த நிலையில் ஹரியானாவில் 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று அறிவித்தது. முதல்வர் நயாப் சிங் சைனி, லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மனைவி ராணி சர்மா, கல்கா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை உலுக்கிய ஜெசிகா லால் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மனு சர்மாவின் தாயார்தான் இந்த ராணி சர்மா. தோஷம் தொகுதியில் ஸ்ருதி சவுத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியும் ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தவருமான கிரன் சவுத்ரியில் மகள்தான் ஸ்ருதி சவுத்ரி. இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் தீபக் ஹூடாவையும் பாஜக வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து பாஜக பெரும் எதிர்ப்பை சந்தித்தது. ஜம்முவில் பாஜக தலைமை அலுவலகத்தை நாள்தோறும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் முற்றுகையிட்டு கண்டனப் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ஹரியானா பாஜக வேட்பாளர் பட்டியல் எந்த பிரளயத்தை ஏற்படுத்துமோ? என்கிற பீதியில் இருக்கிறதாம் டெல்லி மேலிடம்.












Click it and Unblock the Notifications