ஹரியானாவில் பாஜகவின் மொத்த பிளானும் சொதப்பல்? சாமியார் ராம் ரஹிம் ஸ்டேட்டர்ஜியும் அம்போவா
சண்டிகர்: ஹரியானாவில் நேற்று 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் இந்த முறை பாஜகவிற்கு வெற்றி கிடைக்காது என்றே வெளிவந்துள்ளன. இதன்படி பார்த்தால் பாஜகவின் மொத்த வியூகமும் தவிடுபொடியானதாகவும், சாமியார் ராம் ரஹீமின் பரோலும் பயனற்றதாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
ஹரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு தோல்வியே கிடைக்கும் என்று வெளிவந்துள்ளன.

ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். கடந்த முறை பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆட்சி அமைத்தது. தற்போது நடைபெற்று இருந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வியூகத்துடன் பாஜக, தேர்தலை எதிர்கொண்டது. இதற்காக பல்வேறு வியூகங்களையும் வகுத்தது.
இதில் ஒன்றுதான் சாமியார் ராம் ரஹிமின் பரோல் என்று அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. விதிகளின் படியே ராம் ரஹிமுக்கும் பரோல் கிடைத்தாலும் சரியாக தேர்தலுக்கு முன்பாக இவருக்கு பரோல் வழங்கப்படுவதை அரசியலுடன் தொடர்பு படுத்துகிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாலியல் வழக்கு மற்றும் கொலை வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் சாமியார் ராம் ரஹிம், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 15 முறை பரோலில் வந்து இருக்கிறார்.
இதில் குறிப்பாக லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பரோல் கிடைத்து இருக்கிறது. குடும்ப காரணத்திற்காக அவர் பரோல் பெற்று இருக்கிறார். பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது, ஹரியானா செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு 20 நாட்கள் பரோல் கொடுக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கால கட்டத்தில், நேரில் போய் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
ராம் ரஹிம் பரோலில் விடுதலை செய்யப்பட்டதே அவரது ஆதரவாளர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுத்து இருக்கும். இது தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. ஆனால் இன்று வெளியான கருத்துக்கணிப்புகளின் படி, ராம் ரஹிம் யுக்தி பெரிதாக கை கொடுக்கவில்லை என்றே சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஹரியானாவில் இந்த முறை பாஜகவிற்கு வெற்றி கிடைக்காது என்றே பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதன்படி பார்த்தால் பாஜகவின் மொத்த வியூகமும் தவிடுபொடியானதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications