ஹரியானாவில் ஷாக்.. சினிமா பாணியில் நடந்த துப்பாக்கிச்சூடு.. பிரபல அரசியல் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை
சண்டிகர்: ஹரியானாவில் இந்திய நேஷனல் லோக் தள் கட்சியின் (INLD) தலைவர் நஃபே சிங் ராதி அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த தாக்குதல் ஹரியானா மாநிலத்தை அதிர வைத்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவராக இருந்தவர் நஃபே சிங் ராதி. ஹரியானா இந்தியன் லோக் தள் என்ற கட்சியின் தலைவராக இருந்த நஃபே சிங் ராதி, பகதூர்கர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். ஹரியானாவில் பிரபலமான அறியப்படும் தலைவராக இருந்து வந்த நஃபே சிங் ராதி இன்று மாலை பகதூர்கர் நகரில் தனது எஸ்.யூ.வி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மறைந்து இருந்த கும்பல் திடீரென்று துப்பாக்கியால் நஃபே சிங் ராதியை நோக்கி சுட்டு விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நஃபே சிங் ராதியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே நஃபே சிங் ராதி உயிரிழந்தார்.
மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நஃபே சிங் ராதியுடன் காரில் வந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் அருகில் உள்ள பிரஹம் சக்தி சஞ்சிவினி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நஃபே சிங் ராதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் மாநிலம் முழுக்க உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை ஆய்வு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி கலா ஜாதேடி ஆகியோர் காரணமாக இருக்கலாம் என்று போலீசர் சந்தேகிக்கின்றனர்.
நிலத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹரியானாவில் மிக முக்கிய அரசியல் பிரமுகராக இருந்த நஃபே சிங் ராதி,சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications