பகலில் கல்லூரி மாணவன்.. இரவில் பாகிஸ்தான் உளவாளி.. ஹரியானா இளைஞரை பொறிவைத்து பிடித்த போலீஸ்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் ராணுவ கன்டோன்மென்டின் போட்டோக்களை பாகிஸ்தான் உளவு படையுடன் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த இளைஞரைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இந்தியா எல்லையோர பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளது. மேலும், இந்தியாவில் யாராவது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துச் சொல்கிறார்களா என்பதையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே 'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா கல்லூரி மாணவர்
இதற்கிடையே உளவு பார்த்ததாக சொல்லி ஹரியானாவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உளவு பார்த்துப் பல முக்கியமான தகவல்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகச் சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களில் ஹரியானாவில் உளவு பார்த்ததாக நடக்கும் இரண்டாவது கைது இதுவாகும்.
ஹரியானாவில் உள்ள பிரபல கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கும் 25 வயது தில்லான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 12ம் தேதி கையில் துப்பாக்கி உடன் இருக்கும் போட்டோக்களை இவர் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாகவே போலீசார் முதலில் இவரை கைது செய்திருந்தனர்.
விசாரணையில் ஷாக்
விசாரணையின் போது, அவர் கடந்த ஆண்டு நவம்பரில் கர்தார்பூர் வழித்தடம் வழியாகப் பாகிஸ்தானுக்குச் சென்றதும் அங்குப் பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளைச் சந்தித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதும் தெரியவந்தது. தில்லானை ஏமாற்றவும் தங்கள் கைக்குள் கொண்டு வரவும் பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் நிறையப் பணம் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
ராணுவ போட்டோக்கள்
தில்லான் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் நமது இந்திய ராணுவ கன்டோன்மென்ட்டின் படங்களையும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கைத்தாலா காவல் கண்காணிப்பாளர் ஆஸ்தா மோடி தெரிவித்தார்.
இதையடுத்து தில்லானின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது போன் இப்போது தடயவியல் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகள் எப்படி இவருக்குப் பணம் அனுப்பினார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தில்லான் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
இந்தியா பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, நமது நாட்டில் உள்ள உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹரியானாவின் பானிபட் நகரை சேர்ந்த 24 வயதான நௌமன் இலாஹி என்பவர் இதுபோன்ற குற்றச்சாட்டிற்கு கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இலாஹி, ஹரியானாவில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களைப் பகிர்ந்த இலாஹி, இதற்காக அவரது மைத்துனர் மற்றும் நண்பர் மூலம் பணத்தைப் பெற்று வந்ததும் தெரிய வந்தது. அதேபோல டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு பெண் உட்பட இருவரைக் கடந்த வாரம் பஞ்சாப் போலீஸ் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications