ஓட்டு வேணுமா.. இதை குடிங்க.. ஹரியானா கிராம மக்கள் சவால்.. அலறும் அரசியல் கட்சிகள்
சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், மக்களும் தங்களின் பிரச்னையை அதிரடியாக வெளிப்படுத்தி வேட்பாளர்களுக்கு சவால் அளித்து வருகின்றனர். அந்த வகையில் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ளும் ஒரு கிராம மக்கள், வேட்பாளர்களுக்கு நூதன சவால் விடுத்துள்ளனர்.
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஹரியானா தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. வெற்றிக்காக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

போட்டி பலமாக இருப்பதால், அரசியல் களத்தில் நொடிக்கு நொடி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் வியூகங்கள் ஒருபக்கம் என்றால், மக்களும் வேட்பாளர்களுக்கு சவால் அளித்து அதிரடி காட்டி வருகின்றனர்.
ஹரியானாவில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்துவிட்டது. கடைசி நாள் பிரசாரம் என்று விறுவிறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த அரசியல் புள்ளிகளை, தங்களின் சாட்டையடி கேள்வியால் விளாசித் தள்ளியுள்ளனர் ஒரு கிராம மக்கள். அங்கு சர்க்கி தாத்ரி சட்டமன்ற தொகுதியில், சமஸ்பூர் என்ற கிராமம் உள்ளது.

அங்கு மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிலும் குடிநீர் பிரச்னை மிகவும் வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மிகவும் அழுக்காக, கடும் துர்நாற்றத்துடன் இருக்கும் குடிநீர் தான் அந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பார்த்தாலே அது கழிவு நீரா என்ற சந்தேகம் எழுப்பும் நீரைத்தான் அந்த மக்கள் குடிநீராக பயன்படுத்த கட்டாயப்படுத்தபடுகின்றனர்.
விலங்குகள் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத அந்த குடிநீரை தான், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். அந்த மக்களும் தங்களின் பிரச்னைக்காக அனைத்து அரசியல் கட்சிகள், அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரை பார்த்து கோரிக்கை வைத்துவிட்டனர். ஆனால் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
அதனால் மக்கள் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளனர். அங்கு எந்தக் கட்சி தேர்தல் பிரசாரம் செய்தாலும் மக்கள் ஒரு நேரடி சவால் விடுக்கின்றனர். ஒரு டம்ளரில் அந்த மக்கள் குடிக்கும் குடிநீரை நிரப்பி வைக்கின்றனர். உங்களுக்கு எங்கள் ஓட்டு வேண்டும் என்றால் முதலில் இந்த தண்ணீரை குடியுங்கள் என்று சவால் விடுகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர்.
பொதுவாக அரசியல் கட்சிகள், ஒரு பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு சென்றால் அவர்கள் தான் அதிகம் பேசுவார்கள். இந்த கிராமத்தில் அப்படி நடப்பதில்லை. எந்த கட்சியினர் நுழைந்தாலும் மக்களின் குரல் தான் ஒலிக்கிறது. இந்த குடிநீரை குடியுங்கள். ஓட்டு போடறோம் என்று நேரடியாக கூறுகின்றனர். இதனால் மக்கள் வேறு வழியில்லாமல் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த குடிநீரை தெரியாமல் குடித்தால் கூட நோய்கள் வந்துவிடும். அரசியல் கட்சிகள் ஒருமுறை செய்ய யோசிக்கும் விஷயத்தை, நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். தங்களின் பிரச்னையை தைரியமாக எடுத்து பேசிய சமஸ்பூர் மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications