என் மகன், மகளின் உடலில் பஞ்சாப் ரத்தம் ஓடுது! உங்க மருமகள் நான்! சென்டிமெண்ட்டில் இறங்கிய பிரியங்கா
சண்டிகர்: ‛‛பஞ்சாப் குடும்பத்தின் மருமகள் நான். எனது மகன், மகளின் உடலில் பஞ்சாப் ரத்தம் ஓடுகிறது'' என பஞ்சாப்பில் சென்டிமெண்ட்டாக பேசி பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதல் அமைச்சராக உள்ளார். மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.
இதில் ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தான் நேரடி மோதல் உள்ளது. இக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கோட்காபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் ஆம்ஆத்மி, பாஜக கட்சிகளை விமர்சித்ததோடு, சென்டிமெண்ட்டாக பேசினார். பிரியங்கா காந்தி பேசியதாவது:
அன்று குஜராத்.. இன்று டெல்லி மாடலா? நெவர்... பஞ்சாப் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்: பிரியங்கா காந்தி
ஏமாற்றிய பாஜக
குஜராத் மாடல் என பொதுமக்களை ஏமாற்றி மத்தியில் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. இதேபோல் டெல்லி மாடல் எனக்கூறி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி முயற்சிக்கிறது. குஜராத், டெல்லி மாடல் என்பது காகிதம், விளம்பர அளவில் மட்டுமே உள்ளது. பாஜகவின் குஜராத் மாடல் கொள்கை நாட்டை பெரும் பிரச்னையில் தள்ளியுள்ளது. ஆம்ஆத்மி மூலம் புதிய பிரச்னையை பஞ்சாப் மக்கள் சந்திக்க வேண்டாம்.
ஆர்எஸ்எஸ்சில் உருவான ஆம்ஆத்மி
ஆம்ஆத்மி கட்சி என்பது ஆர்எஸ்எஸ்சில் இருந்து உருவானது தான். கட்சியின் சித்தாந்தங்களும் அப்படியே உள்ளது. டெல்லியில் ஆம்ஆத்மி உருவாக்கியதாக கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் எதுவும் இல்லை. ஓட்டளிப்பதற்கு முன்பு ஒவ்வொருவரும் தங்களது அரசியல் கட்சி, அதன் தலைவர்கள் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கவனம் தேவை
பஞ்சாப்பில் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்தது. முதல்-அமைச்சராக இருந்த அம்ரீந்தர் சிங் டெல்லி பாஜக மேலிடத்துடன் ரகசிய கூட்டணியில் இருந்துள்ளார். அவர்கள் கூறியது போன்று செயல்பட்டு காங்கிரசுக்கு துரோகம் செய்தார். இதனால் தான் முதல் அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டார். இந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். பஞ்சாப்பில் ஆம்ஆத்மி, பாஜக ஆட்சி என்பது டெல்லியில் இருந்து செயல்படுத்தும் வகையில் இருக்கும். ஆனால் காங்கிரஸ் முதல் அமைச்சர் சரண்ஜித் சன்னியின் ஆட்சி, பஞ்சாப்பின் ஆட்சியாக இருக்கும். இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருமகள் சென்டிமெண்ட்
நான் பஞ்சாப் குடும்பத்தில்(பிரியங்காவின் கணவரின் பூர்விகம் பஞ்சாப்) திருமணம் செய்துள்ளேன். எனது மகள், மகனின் உடலில் பஞ்சாப் ரத்தம் ஓடுகிறது. பஞ்சாப் மக்களின் நிலையை இதயபூர்வமாக என்னால் உணர முடியும். பஞ்சாப் மக்கள் ஒருபோதும் தங்கள் கொள்கையில் இருந்து மாறுபட மாட்டார்கள். இதற்கு டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை கூறலாம். கடைசிவரை கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருந்து சாதித்துள்ளீர்கள்'' என்றார்.
காங்கிரஸ் நிலை என்ன
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. தற்போது முதல் அமைச்சராக உள்ள சரண்ஜித் சன்னியை மீண்டும் முதல் அமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதனால் முதல் அமைச்சர் பதவி மீது கண்வைத்திருந்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து கோபத்தில் உள்ளார். அவர் தேர்தல் பிரசாரங்களில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.