தினசரி ரூ.1500 செலவு.. ஆனா இந்த எருமையின் விந்தணு விற்றாலே 5 லட்சம் லாபம்! மொத்த விலை தலை சுத்திடும்
சண்டிகர்: பொதுவாக நாம் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாதிரி நிற்காதே எனத் திட்டுவோம். இதனால் அவர்கள் கோபித்துக்கூடக் கொள்வார்கள். ஆனால், எருமை எல்லாம் அவ்வளவு சீப்பானது இல்லைங்க.. இங்க ஒருவர் எருமையின் விந்தணுவை விற்று மட்டுமே சுமார் ரூ.5 லட்ச ரூபாயை அள்ளி வருகிறார். யார் இவர்.. இவரது எருமை மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் உணவில் மாட்டுப் பாலை தவிர்க்கவே முடியாது. பால், தயிர், மோர் என எதாவது ஒரு வகையில் இதைத் தினசரி குறைந்தது ஒரு முறையாவது நாம் எடுத்துக் கொள்வோம்.

எருமை: அதிலும் தயிர் எல்லாம் செய்யப் பலரும் எருமை மாட்டுப் பாலையே விரும்புவார்கள். ஏனென்றால் எருமை மாட்டின் பால் தான் கொழுப்பு நிறைந்து அடர்த்தியாக இருக்கும். இதனால் எருமைக்கும் சரி எருமை மாட்டுப் பாலுக்கும் சரி நல்ல தேவை இருக்கிறது. மேலும், பசுவுடன் ஒப்பிடும் போது எருமை வளர்க்கச் செலவும் குறைவு என்பதால் பலரும் இதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இங்கே ஒருவர் எருமைக்குப் பால், முட்டை எனத் தினசரி ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார். அதேநேரம் அதற்கு ஈடாக லாபமும் பார்த்துவிடுகிறார். யார் அவர்.. என்ன செய்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பல்மிந்த்ரா கில். இவர் அன்மோல் என்ற பெயரில் ஒரு எருமை மாட்டை வளர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த புஷ்கர் சர்வதேச கால்நடை கண்காட்சியில் அவர் தனது எருமையை காட்சிப்படுத்திய நிலையில், அனைவரது பார்வையும் அந்த எருமை மீது தான் இருந்தது. ஏனென்றால் 8 வயதான அந்த எருமையின் எடை மட்டும் 1500 கிலோ ஆகும். அந்த கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் இந்த எருமையை வியப்பாகப் பார்த்துச் சென்றனர்.
ரூ. 23 கோடி: பலரும் அந்த எருமையை வாங்க முன்வந்துள்ளனர். ஒரு சிலர் ரூ. 23 கோடி வரை கூட கொடுக்க தயாராக இருந்ததாகவும் இருப்பினும், அன்மோலை விற்க தனக்கு மனமில்லை என்பதால் அதை மறுத்துவிட்டதாகக் கூறுகிறார் பல்மிந்த்ரா கில். எருமைக்கு இவ்வளவு விலையா.. நம்பும்படி இல்லையா என நீங்கள் கேட்கலாம். அந்த எருமையில் இருந்து கிடைக்கும் வருமானம் அதை விட அதிகம். வருமானம் குறித்துப் பார்க்கும் முன்பு தினசரி எவ்வளவு செலவு என்று பார்க்கலாம்.
செலவு எவ்வளவு: இது குறித்து அந்த விவசாயி கூறுகையில், "நான் ஒரு கண்காட்சியில் தான் அன்மோலை வாங்கினேன். அப்போது முதல் நான் தான் வளர்த்து வருகிறேன். இதன் உணவுக்கே தினசரி ரூ. 1000 முதல் ரூ.1500 வரை செலவிட வேண்டி உள்ளது. அன்மோலுக்கு பிரத்தியேக உணவைத் தான் வழங்குவோம். தினசரி 5 கிலோ பால், 4 கிலோ மாதுளை ஜூஸ், 30 வாழைப்பழம், 20 முட்டை, 250 கிராம் பாதாம் கொடுப்போம். இது தவிரத் தினசரி குளியல் மாசாஜ் எல்லாம் செய்வோம். செலவைச் சமாளிக்க முடியாமலேயே நான் அன்மோலின் தாய் மற்றும் உடன் பிறந்த எருமையை விற்றுவிட்டேன்" என்கிறார்.
ஏன் இவ்வளவு செலவு என்றால் அன்மோலின் விந்தணு அந்தளவுக்கு ஸ்பெஷலான ஒன்றாம். இதன் வாரிசுகள் அனைத்தும் தினசரி குறைந்தது 20 லிட்டர் பாலை கறக்கும் திறன் கொண்டதாம். அதிகபட்சமாக அன்மோலின் தாய் தினசரி 25 லிட்டர் வரை பாலை கறந்துள்ளதாம். சரி, இதன் மூலம் அந்த விவசாயிக்கு என்ன லாபம் என்பதை நாம் பார்க்கலாம்.
வருமானம்: அன்மோலிடம் இருந்து வாரம் 2 முறை விந்தணுக்களை எடுப்பார்களாம். ஒரு முறை எடுக்கப்படும் விந்தணுவை வைத்து 300 முதல் 900 எருமைகளைக் கருத்தரிக்க முடியுமாம். ஒவ்வொரு எருமைக்கும் ரூ.300 வரை கட்டணமாக வாங்குகிறார் பல்மிந்தரா சிங். இதன் மூலமாகவே மாதத்திற்கு சுமார் 4 முதல் 5 லட்சம் வரை லாபம் பார்க்கிறார். இதன் விந்தணுவை விற்றால் கிடைக்கும் லாபம் அதிகம் என்றும் அன்மோல் தனக்கு அதிகப் பணத்தைச் சம்பாதித்துத் தரும் என்றும் பல்மிந்த்ரா கில் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications