அமரீந்தர் சிங் எதிர்ப்புக்கு மத்தியில்.. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமனம் செய்து சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அமரீந்தர் சிங் இருந்து வருகிறார். இங்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டிய இந்த நேரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் கடுமையாக வெடித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்குவுக்கும் , முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே நீண்ட வருடங்களாக பனிப்போர் நிலவி வந்தது.

இருவருக்கும் மோதல்
அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துக்குவுக்கும் இடையே தனித்தனி ஆதரவாளர்கள் இருக்கின்றனர். வருகிற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அமரீந்தர் சிங்தான் முதல்வர் என்று டெல்லி காங்கிரஸ் தலைமை பச்சைக்கொடி காட்டி விட்டதாக தெரிகிறது. இதனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்று நினைத்த நவ்ஜோத் சிங் சித்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வந்தார்.

சோனியா காந்தியிடம் புகார்
ஆனால் சித்து பதவிக்கு வந்து விட்டால் தன்னை மதிக்க மாட்டார் என்று முடிவெடுத்த்த முதல்வர் அமரீந்தர் சிங், சித்துவுக்கு எதிராக களமிறங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். தனக்கு எதிராக செயல்படும் முதல்வர் அமரீந்தர் சிங்கைப் பற்றி புகார் கூறினார். இதேபோல் முதல்வர் அமரீந்தர் சிங்கும் சோனியா காந்தியை தனியே சந்தித்து சித்துக்கு எதிராக புகார்களை அடுக்கினார்.

சமாதானம் செய்தார்
தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியில் எந்த குழப்பமும் வந்து விடக்கூடாது என்பதற்காக இருவரையும் சமாதானம் செய்து, சில ஆலோசனைகளையும் கூறி அனுப்பி வைத்தார் சோனியா காந்தி. இதனை தொடர்ந்து அமரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்து வந்தது.

நவ்ஜோத் சிங் சித்து நியமனம்
இந்த நிலையில் இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் சோனியா காந்தி. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமனம் செய்து சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் செயல் தலைவர்களாக சங்கத் சிங் கில்ஸியான், சுக்விந்தர் சிங் டேனி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோரும் பஞ்சாப் காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications