சிறையில் இருந்து விடுதலை.. 10 மாதத்துக்கு பின் மீண்டும் சீறிய சித்து.. பஞ்சாப் ஜெயிலில் ஒரே பரபரப்பு
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், அம்மாநில மாஜி காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து ஓராண்டு சிறை தண்டனையை முடித்து இன்று விடுதலையானார். அவரை ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற நிலையில் அவர் மீண்டும் சீறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு இவர் அரசியலில் நுழைந்தார். பாஜகவில் செயல்பட்டு வந்த சித்து அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அமைச்சராக இருந்தார்.

அதன்பிறகு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆம்ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சித்துவும் தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் கடந்த 1988ல் விபத்து ஒன்றில் குர்னாம்சிங் என்பவர் இறந்தார். இந்த வழக்கில் சித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சித்துவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மே மாதம் 20ம் தேதி சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் சித்து இன்று சிறையில் இருந்து விடுதலையானார். நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் முடிய 2 மாதங்கள் இருக்கும் நிலையில் சித்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சித்துவை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பஞ்சாப்பில் நடக்கும் ஆம்ஆத்மி ஆட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி சித்து கூறுகையில், ‛‛ பஞ்சாப்பில் ஜனநாயகம் என்பது இல்லை. ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரும் நோக்கத்தில் சதித்தீட்டம் தீட்டப்படுகிறது. மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் குறிவைக்கப்படுகின்றனர். மத்திய அரசு ஜனநாயகத்தை சிதைத்து வருகிறது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகளை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மக்களுக்கு தவறான நம்பிக்கைகளை வழங்கி வருகிறார்'' என்றார்.
இந்த வேளையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சித்து, ‛‛ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலர். அவருடன் நான் என்றும் நிற்பேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications