ஹரியானாவில் பாஜக அரசுக்கு நெருக்கடி? நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காங்கிரஸ்.. இன்று விவாதம்
சண்டிகர்: ஹரியானாவில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக ஹரியானா சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற இருக்கிறது.
ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் சிங் லால் கத்தார் உள்ளார். ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏக்களும் கூட்டணி கட்சியான ஜன்னாயக் ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பெரும்பான்மைக்கு 46 எம்.எல்.ஏக்கள் தேவை. பாஜக கூட்டணிக்கு தற்போது 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.

ஹரியானாவில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஹரியானா சட்டபேரவையில் எடுத்து வைக்கப்பட்டு காரசார வாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தான், ஹரியானாவில் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தேவையான 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்ததால், தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் கியான்சந்த் குப்தா தெரிவித்தார். இதன்படி, பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்பட உள்ளது.
ஹரியானா பாஜக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதால், அதற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபிந்த சிங் ஹூடா தெரிவித்தார். அதேவேளையில், எதிர்க்கட்சிகள் ஆண்டுதோறும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் அப்போதுதான் அரசின் சாதனைகள் எடுத்துரைக்க முடியும் என்ற முதல்வர் மனோகர் சிங் லால் கட்டார் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. எனினும், அது தோல்வி அடைந்தது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications