எங்க வாக்காளர்கள் பிக்னிக் போய்ட்டாங்க..அதனாலதான் ஹரியானா தேர்தலில் தோத்துட்டோம்..பாஜக விளக்கம்!
சன்டிகர்: ஹரியாணா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. மூன்று மாநகராட்சிகளில் இரண்டில் பாஜக தோற்றது.
எங்களுக்கு வாக்களிக்ககூடிய வாக்காளர்கள் பிக்னிக் போய்ட்டாங்க..அதனாலதான் ஹரியானா தேர்தலில் தோத்துட்டோம். என பாஜக தோல்விக்கு விளக்கம் அளித்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் பாஜக, சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. மூன்று மாநகராட்சி மேயர் பதவிகளில் சோனிபட், அம்பாலா என 2 இடங்களில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது. பஞ்ச்குலா மாநகராட்சியை மட்டும் கைப்பற்றியது உள்ளது, அதுவும் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் போராடிதான் வென்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியாணா மாநிலத்திலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக விவசாயிகளின் போராட்டத்தை மாநிலஅரசு கையாண்ட விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. விவசாயிகள் மீது மாநில எல்லையில் காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறை நடத்தியது சர்ச்சையானது. இதன் காரணமாகத்தான் பாஜக கூட்டணி தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவின் இந்த தோல்வியை விட, தோல்விக்கான காரணம் குறித்து மாநில பாஜக தெரிவித்த விளக்கம்தான் தற்போது வைரலாகி வருகிறது. தேர்தல் தோல்வி குறித்து பேசிய பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சர்மா, பொதுவாக டிசம்பர் இறுதியில் மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். குறிப்பாக டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் ஆகும். இதனால் எங்கள் கட்சிக்கு வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். அதனால்தான் நாங்க தோற்று விட்டோம். இல்லாவிடில் முடிவு வேறு மாதிரி இருக்கும் என்கிறார். பாஜகவின் இந்த வினோத விளக்கம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை கொட்டிய விஷமிகள்
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், மாநிலத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில், பாஜக இந்த அளவிற்கு ஜெயித்ததே பெரிய விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.