"மன் கீ பாத்" நிகழ்ச்சிக்கு வரலையே.. நர்சிங் மாணவிகள் மீது பாய்ந்தது நடவடிக்கை! கடும் தண்டனை
சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடியின் 1000ஆவது மன் கீ பாத் நிகழ்ச்சியைக் கேட்க வராத மாணவிகள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுடன் மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசுவார். மேலும் நாடு முழுக்க சாதனை செய்பவர்களிடமும் அவர் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியில் உரையாடுவார்.
மன் கீ பாத்: இந்த நிகழ்ச்சியின் 100ஆவது எபிசோட் கடந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். இந்த நிகழ்ச்சியைக் காண நாடு முழுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நாடு முழுக்க இருந்த மக்கள் மன் கீ பாத் நிகழ்ச்சியின் இந்த 100ஆவது எபிசோட்டை கேட்டனர்.
அதன்படி சண்டிகரில் உள்ள பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம் என்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனத்திலும் மன் கீ பாத் உரையைக் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே உள்ள முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் அனைவரும் நிச்சயம் இந்த நிகழ்ச்சியைக் கேட்க வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதில் கலந்து கொள்ளவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
நடவடிக்கை: இருப்பினும், இதில் முதல் ஆண்டு படிக்கும் 28 மாணவிகள், மூன்றாம் ஆண்டு படிக்கும் 8 மாணவிகள் என மொத்தம் 36 மாணவிகள் மன் கீ பாத்தை கேட்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி, மன் கீ பாத் ஒலிபரப்பு நிகழ்ச்சிக்கு வராத அனைத்து மாணவிகளும் ஒரு வாரத்திற்குக் கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது எனக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தும், நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்து ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு சண்டிகர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர்கள் சாடியுள்ளனர். இது குறித்து சண்டிகர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சர்மா, "அரசியல் சாசனத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் சுதந்திரத்தை ஒடுக்க முயல்கின்றன.
ஏற்க முடியாது: மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சியைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். 100வது எபிசோட்டை கேட்க ஏற்பாடு செய்ய அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். பிரதமரின் இந்த நிகழ்ச்சியைக் கேட்கக் கட்டாயப்படுத்துவது மிகப் பெரிய தவறு.
இந்த விவகாரத்தில் 36 நர்சிங் மாணவிகள் வெளியேறத் தடை விதித்துள்ளனர். இந்தத் தடை விதிக்கப்பட்டதை சண்டிகர் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது, ஜனநாயக விரோதமானது மற்றும் தன்னிச்சையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications