அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சண்டிகர்: மத்திய பாஜக அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையான அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு அக்னிபாத் என்ற பெயரில் புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையை அண்மையில் வெளியிட்டது. ராணுவத்தில் பணிக் காலம் 4 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்க்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரும் போராட்டங்கள் வெடித்தன. வட இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதனால் பல நூறு ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களால் ரயில்வே துறைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அக்னிபாத் வீரர்கள், 4 ஆண்டுகால ராணுவப் பணிக்கு என்ன செய்வார்கள்? என்ற கேள்விக்கு பாஜக தரப்பில் இருந்து வெளியான பதில்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையே அக்னிபாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபை இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பஞ்சாப் சட்டசபையில் முதல்வர் பகவந்த் மான் இத்தீர்மானத்தை இன்று தாக்கல் செய்தார். இத்தீர்மானம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.