அமரீந்தர் வைத்த முக்கிய கோரிக்கை.. பஞ்சாப்பில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அமித் ஷா? கலக்கத்தில் காங்.!
சண்டிகர்; பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் நேற்று திடீரென பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அசைக்க முடியாத மாநில தலைவர்.. காங்கிரசின் வலுவான தலைவர்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்பட்ட அமரீந்தர் இப்படித் அமித் ஷா கேம்பிற்கு விசிட் அடித்தது அரசியல் வட்டாரத்தை உலுக்கி உள்ளது.
கொரோனா காலம்.. தியேட்டர்கள் பெரிதாக திறக்கவில்லை.. படங்களும் பெரிதாக வெளியாகவில்லை.. ஆனாலும்.. இந்தாங்க படத்தை விட பல "ட்வீஸ்ட் அண்ட் டர்ன்" என்று பஞ்சாப் அரசியல் மாற்றங்கள், ,மிகவும் திரில்லாக சென்று கொண்டு இருக்கிறது. ஐபிஎல்லில் சிஎஸ்கே கடைசி ஓவரில் இதய துடிப்பை எகிற வைப்பது போலத்தான் தற்போது பஞ்சாப் அரசியல் மாற்றங்கள் எப்போது, என்ன நடக்கும் என்று தெரியாமல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பஞ்சாப்பில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவின் கடந்த ஒரு வருட எதிர்ப்பு காரணமாக அம்ரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். கடந்த ஒரு வருடமாக ஆட்சிக்கு எதிராக கட்சிக்கு உள்ளே பெரிய அளவில் பூசல் நிலவி வந்த நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

நீக்க வேண்டும் கோரிக்கை
அமரீந்தர் சிங்கை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று கடுமையாக போராடிய சித்து அதற்கு பின் சந்தோசமாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சித்துவிற்கும் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு அவ்வளவாக செட்டாகவில்லை. முக்கியமாக அமைச்சரவையை தேர்வு செய்வதில் இருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாகவே தற்போது சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். சில அமைச்சர்களை மாற்றினால் மட்டுமே சமாதானம் அடைவேன் என்று சித்து கூறியதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக பல அமைச்சர்களும் பஞ்சாப்பில் உள்ளனர்.

சந்திப்பு
ஒரு பக்கம் சித்து இப்படி காங்கிரஸ் தலைமையை எதிர்க்கும் நிலையில், இன்னொரு பக்கம் அம்ரந்தர் சிங் நேற்று மத்திய இணை அமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில்தான் தற்போது அமித் ஷாவை அமரீந்தர் சிங் சந்தித்தார். இவர்கள் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை செய்தனர். அடுத்த வருடம் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

பாஜக இணைப்பு எதிர்பார்ப்பு
இப்படிப்பட்ட நேரத்தில் அமரீந்தர் சிங் அமித் ஷாவை சந்தித்து இருப்பது காங்கிரசை நிலைகுலைய வைத்துள்ளது. இந்த சந்திப்பில் விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயர்வு குறித்து பேசியதாக அம்ரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தவிர்த்து பஞ்சாப் ஆட்சி மாற்றம், தேர்தல் குறித்தும், பாஜகவில் இணைவது குறித்துமே இதில் அதிகம் விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். அமரீந்தர் சிங் விரைவில் பாஜகவில் ஐக்கியம் ஆகவே அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சி பேசினாரா?
முக்கியமாக பஞ்சாப் என்பது பாகிஸ்தான் எல்லையோர மாநிலம், இங்கு நிலையற்ற ஆட்சி நிலவுகிறது. இதனால் பாதுகாப்பை மனதில் வைத்து ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்ய வேண்டும். உள்துறை அமைச்சர் என்ற ரீதியில் பரிந்துரை செய்ய வேண்டும். பஞ்சாப்பில் நிலையில்லாத ஆட்சியை கலைத்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று அமரீந்தர் சிங் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அமித் ஷாவும் இதில் விரைவில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

எல்லை மாநிலம்
எல்லை மாநிலம், பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு அமித் ஷா இதற்கான காய்களை நகர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. பஞ்சாப்பில் ஏற்கனவே பல முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து இருக்கிறது. கடந்த 2000க்கு பின்தான் அங்கு நிலையான ஆட்சியே உள்ளது. மற்றபடி பல முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை பஞ்சாப் சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் பஞ்சாப் குடியரசுத் தலைவர் ஆட்சியை சந்திக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications