"என்னப்பா, அவருக்கு ஜாமீன் தரலாமா.." சாட் ஜிபிடியை பார்த்து கேட்ட நீதிபதி! கண்டிஷன் அப்ளை!
சண்டிகர்: சாட் ஜிபிடி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இப்போது நீதித்துறையும் சாட் ஜிபிடி பக்கம் திரும்பியுள்ளனர். அதுவும் இந்தச் சம்பவம் இந்தியாவில் தான் நடந்துள்ளது.
சாட் ஜிபிடி என்பது டெக் துறையில் அடுத்து மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும்.கடந்த சில மாதங்களாகவே எங்குப் பார்த்தாலும் இந்த சாட் ஜிபிடி குறித்தே பேச்சாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே நீதித்துறையும் இப்போது இந்த சாட் ஜிபிடி பக்கம் திரும்பியுள்ளது.

சாட் ஜிபிடி
அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ என்ற நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கருவிதான் இந்த சாட் ஜிபிடி. இதுவரை நாம் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான ஒரு கருவியாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது. எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும், காமெடி கேட்டால் காமெடி சொல்லும் அவ்வளவு ஏன் லவ் லெட்டர் கூட எழுதித் தரும். அந்தளவுக்கு வலிமையான கருவியாக இருக்கும் இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே இப்போது நீதித்துறையும் சாட் ஜிபிடி பக்கம் திரும்பியுள்ளனர்.

பஞ்சாப் ஐகோர்ட்
பஞ்சாப் ஐகோர்ட்டில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கலவரம், மிரட்டல், கொலை மற்றும் குற்றச் சதி குற்றச்சாட்டுகளில் கீழ் இளைஞர் ஒருவர் ஜூன் 2020இல் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் ஜாமீன் கோரி பஞ்சாப் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். லூதியானாவில் உள்ள சிம்லாபுரி காவல் நிலையத்தில் கலவரம், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பஞ்சாபைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் என்ற ஜஸ்ஸி கைது செய்யப்பட்டார்.

நீதிபதி கேட்ட கேள்வி
அவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவர் தான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பஞ்சாப் ஐகோர்ட், செயற்கை நுண்ணறிவு கருவியான சாட் ஜிபிடியிடம் உதவி கேட்டது. அதாவது உலகளவில் இதுபோன்ற கொடூர குற்றம் செய்தவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதா என்று நீதிபதி கேட்டார்.

சாட் ஜிபிடி சொன்ன பதில்
கொடூர குற்றம் புரிந்தவருக்கு ஜாமீன் வழங்க உலகளவில் இருக்கும் நீதித்துறை முடிவுகள் குறித்து நீதிபதி கேட்டார். அதற்கு சாட் ஜிபிடி விரிவான பதிலை அளித்திருந்தது. அதில், "கொடூர தாக்குதல் சம்பவங்களில், பல்வேறு சூழ்நிலைகள், ஒவ்வொரு நாட்டின் விதிகளைக் கருத்தில் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுப்பார்கள். அதேநேரம் பொதுவாகப் பார்த்தால், கொலை, சித்திரவதை உள்ளிட்ட வன்முறை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோர் சமூகத்திற்கு ஆபத்தானவர்களாகக் கருதப்படுவார்கள். மேலும், அவர்கள் தப்பியோடவும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஜாமீன் தரலாமா
இதுபோன்ற வழக்குகளில் நீதிபதிகள் பெரும்பாலும் ஜாமீன் வழங்க மாட்டார்கள். அப்படியே ஜாமீன் வழங்கினாலும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் தலைமறைவாகாமல் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்யவும் ஜாமீன் தொகையை மிக அதிகமாக நிர்ணயம் செய்யலாம். தாக்குதலின் தீவிரம், குற்றஞ்சாட்டப்பட்டவரின் குற்றவியல் ஹிஸ்டரி, அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் ஆகியவற்றை ஜாமீன் வழங்கும் முன்பு நீதிபதி கருத்தில் கொள்வார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற அனுமானமே நீதி அமைப்பின் அடிப்படைக் கோட்பாடாகும்.

பஞ்சாப் அரசு எதிர்ப்பு
எனவே, அனைவருக்கும் ஜாமீன் கோர உரிமை உள்ளது.. எனவே, கொடூர தாக்குதல் வழக்குகளில் கூட, அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த மாட்டார்கள், அல்லது தலைமறைவாக மாட்டார்கள் என்று நீதிபதி கருதினால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படலாம்" என்று கூறியது. முன்னதாக குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இருப்பினும், பஞ்சாப் அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தள்ளுபடி
மனுதாரர் மீது ஏற்கனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், "அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார், தலைமறைவாக மாட்டார் என்று இந்த நீதிமன்றம் உறுதியளிக்கும் அடிப்படையில் இந்த மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை" என்று கூறியே ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், அவர் மீதான கிரிமினல் ஹிஸ்டரி மற்றொரு காரணமாகும்.

நீதிமன்ற கருத்து இல்லை
மேலும், இந்த தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி சிட்காரா, சாட் ஜிபிடி கூறிய கருத்துகளை நீதிமன்ற கருத்துகளாக நிச்சியம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இது குறித்து நீதிபதி கூறுகையில், "சாட் ஜிபிடி கூறிய எந்தவொரு கருத்தும் வழக்கின் பற்றிய நீதிபதியின் கருத்தாகவோ அல்லது உத்தரவாகவோ கருதக் கூடாது. ஜாமீன் குறித்து உலகெங்கும் இருக்கும் நீதித்துறையின் கண்ணோட்டத்தை காட்டுவது மட்டுமே நோக்கமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications