அடேங்கப்பா! பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் காங். பறிகொடுத்த இடங்கள் இத்தனையா? அகாலி தளம் பரிதாபம்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் கட்சிகளின் வசம் இருந்த தொகுதிகளில் ஆம் ஆத்மி இந்த முறை மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 71.95% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், அதில் ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 59 இடங்களில் வெல்ல வேண்டும். இங்குக் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி
பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சியே பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டது. அதேபோல இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலையில் உள்ளது. தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அதேபோல முக்கிய பிராந்திய கட்சியான அகாலி தளம் 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

ஆம் ஆத்மிக்கு பெரிய வெற்றி
கடந்த 2017 தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே வென்ற ஆம் ஆத்மி இந்த முறை 92 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதாவது கூடுதலாக 72 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலில் வென்ற 20 இடங்களில் 18 இடங்களை மீண்டும் கைப்பற்றி உள்ளது. கைவசம் இருந்த தொகுதிகளில் இரண்டில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சியால் வெல்ல முடியவில்லை. அதில் ஒரு தொகுதியில் காங்கிரசும் மற்றொன்றில் இதர கட்சியும் முன்னிலையில் உள்ளது.

காங். & அகாலி தளம் படுதோல்வி
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்று இருந்த 77இல் 66 தொகுதிகளில் இந்த முறை அக்கட்சி தோல்வியைத் தழுவி உள்ளது. அதில் சுமார் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வென்றுள்ளது. அதேபோல அகாலி தளம் கடந்த முறை வென்று இருந்த 15 தொகுதிகளில் 13 இழந்துள்ளது. குறிப்பாக அதில் 10 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் கட்சிகளில் இருந்து மட்டும் ஆம் ஆத்மி இந்த முறை 72 இடங்களைத் தன்வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

டெல்லிக்கு வெளியே
இந்தத் தேர்தல் வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி கட்சி என்றே அடையாளப்படுத்தப்பட்ட ஆம் ஆத்மி, கடந்த காலங்களில் தலைநகருக்கு வெளியே வளர முயன்ற போது அது பலன் அளிக்கவில்லை. ஆனால், இப்போது முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு மத்திய அரசுடன் பனிப்போரை ஆம் ஆத்மி நடத்த வேண்டி இருந்தது.. இப்போது முதல்முறையாக மாநில அந்தஸ்து கொண்ட மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications