மன உளைச்சலோடு சாகிறேன் - வாட்ஸ்அப்பில் வீடியோ போட்டு தூக்கில் தொங்கிய சின்னராஜா
இந்த ஆட்சியில் எதுவும் நடக்காது மன உளைச்சலோடு சாகிறேன் என்று கூறிவிட்டு பேரூரில் ரியல் எஸ்டேட் ஓனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கிறது. மன உளைச்சலோடு மரணமடைகிறேன் என்று வீடியோவில் பேசிவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டமே அவரது தற்கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
உயிரை மாய்த்துக்கொண்ட நபரின் பெயர் சின்னராஜா என்பதாகும். போரூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்தார். அவருக்கு ரீட்டா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இரு தினங்களுக்கு முன்னதாக சின்னராசு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னராசுவின் மரணம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து சின்னராசுவின் சடலத்தை மீட்டனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தவே, சின்னராசு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
தற்கொலைக்கு முன்னதாக சின்னராசு வீடியோ எடுத்துள்ளார். அதில் தனது தற்கொலைக்கான காரணத்தை கூறியுள்ளார்-
இடங்களுக்கு பஞ்சாயத்து அப்ரூவல் தடை செய்யப்பட்டதை அடுத்து என் வாழ்க்கை வீணாகிவிட்டது. என்னைப்போன்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களின் லைப் வீணாகிவிட்டது என்று கூறியுள்ளார். வட்டிக்கு மேல் வட்டிக்கு பணம் வாங்கி போட்டும் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்தான். தினம் தினம் போராட்டம்தான். அப்ரூவல் வாங்க சென்றால் ஆளுங்கட்சியினர் பெயரை சொல்லி பணம் கேட்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் தொழிலை ஒழித்து கட்டி விட்டார்கள் யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. படுத்தால் தூக்கம் வருவதில்லை மனதில் நிம்மதியில்லை. மன உளைச்சலோடு சாகலாம் என்று முடிவு செய்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
ரியல் எஸ்டேட் தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதே என் ஆசை என்ற அந்த வீடியோவில் கூறியுள்ளார். குடும்பத்தை விட்டு செல்கிறேன் என்ற கண்டம் மனதிற்குள் இருந்தாலும் இதற்கு மேல் உயிர் வாழ்ந்தால் தினம் தினம் செத்து பிழைக்கவேண்டும் என்றும் தனது தற்கொலைக்கு முந்தைய வீடியோவில் கூறியுள்ளார்.