பள்ளிவாசல் கட்ட சொந்த நிலத்தை தந்த சீக்கிய குடும்பம்... வேற்றுமையில் ஒற்றுமை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் கட்டிக்கொள்வதற்காக 500 அடி நிலத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது சீக்கியர் குடும்பம்.
பஞ்சாப்பில் பர்னாலா-மொகா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மச்சிகே என்ற கிராமத்தில் தான் இந்த வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்தி பிடிக்கும் நிகழ்வு நடந்துள்ளது.
பள்ளிவாசல் கட்ட இலவசமாக கொடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 8 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைபணி
பஞ்சாப் மாநிலம் மொகா மாவட்டத்தில் உள்ள மச்சிகே கிராமத்தில் இருந்த பள்ளிவாசல் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக அகற்றப்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த மிகவும் சிரமப்பட்டதை உணர்ந்த அந்த கிராமத்தை சேர்ந்த சீக்கியர் குடும்பம் தங்களது சொந்த நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தது.

சகோதரத்துவம்
இதையடுத்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 சதுர அடி நிலத்தை தர்ஷன் சிங் என்பவர் இஸ்லாமியர்களுக்கு வழங்க முடிவு செய்தார். இது தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் பேசி ஒப்புதல் பெற்ற அவர் நிலத்தை கடந்த வாரம் இலவசமாக கொடுத்தார். தாய் பிள்ளையாக பழகிய காரணத்தால் பள்ளிவாசலுக்கு சீக்கியர் இடம் தந்ததாக அந்த கிராமத்தை சேர்ந்த ரூப் முகமது தெரிவித்துள்ளார்.

ஒரே கிராமம்
சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கிராமத்தில் வசித்து வருவதாகவும், இஸ்லாமியர்களும் தங்களின் சகோதரர்கள் தான் எனவும் கூறுகிறார் தர்ஷன் சிங். மேலும், இடத்தை கொடுத்தது பற்றி எந்த விளம்பரமும் தேடிக்கொள்ள தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

அன்பு
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிற்கு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இந்த நிகழ்வு மிகச்சிறந்த உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications