அம்மாடி.. அந்தரங்க உறுப்பை குறிவைத்து.. கடித்து குதறிய பிட்புல் நாய்! அலறிய இளைஞர்! பதறிய ஊர் மக்கள்
சண்டிகர்: உலகிலேயே மிகவும் ஆக்ரோஷமான இன நாய்களில் ஒன்றான பிட்புல் இன நாய், ஒருவரின் அந்தரங்க உறுப்பைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உலகளவில் அதிகப்படியானோர் செல்ல பிராணியாக விரும்பி வளர்க்கும் விலங்குகளில் ஒன்றாக நாய் இருக்கிறது.. உலகெங்கும் பல கோடி பேர் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகவே கருதி வளர்க்கின்றனர்.

இருப்பினும், சில நேரங்களில் அக்கம்பக்கத்தினருக்கு வீட்டில் வளர்க்கப்படும் நாய்களால் கூட ஆபத்து ஏற்படலாம். அதிலும் ஆக்ரோஷ குணம் கொண்ட நாய் வகைகளால் ரிஸ்க் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
கொடூரம்: இதனிடையே அப்படியொரு கொடூர சம்பவம் தான் பிட்புல் இன நாயால் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற பகுதியில் பிட்புல் நாய் ஒன்று 30 வயது நபரைத் தாக்கி அவரது அந்தரங்க உறுப்பைக் கடித்துக் குதறியுள்ளது. இதனால் அந்த நபர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அங்கே உள்ள பிஜ்னா கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாய்க் கடியால் மிக மோசமாகக் காயமடைந்த அவர், முதலில் கர்னாலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கே அவருக்கு சிகிச்சையளிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், அவர் கராண்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்ன நடந்தது: இது குறித்துப் பாதிக்கப்பட்ட நபரின் சகோதரர் கூறுகையில், "அவர் வழக்கம் போலத் தனது விவசாய நிலத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே போகும் வழியில் சுற்றிக் கொண்டிருந்த பிட்புல் இன நாய் அவரைத் தாக்கியது.. நாய் கடிக்க வந்ததைப் பார்த்து அச்சமடைந்த அவர், அங்கே இருந்த தடியைக் கொண்டு நாயைத் தாக்கியுள்ளார். அப்போது தான் அந்த நாய் அவரது அந்தரங்க பகுதியைக் கடித்துவிட்டது" என்றார்.

நாய் கடியால் அவர் வலியால் அலறி துடித்துக் கத்தியுள்ளார். இதைக் கவனித்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், "பிட்புல் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.
நாயின் உரிமையாளர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், தற்போது வரை போலீசார் எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யவில்லை.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார். சமீப காலங்களாகவே நாய்களின் தாக்குதல் ஆங்காங்கே நடந்து வருகிறது.
பிட்புல் தாக்குதல்: அதிலும் குறிப்பாக ஆக்ரோஷமான பிட்புல் இன நாய் குறித்து சில மாதங்களாகவே சர்ச்சை இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் 82 வயது முதியவர் சுசீலா திரிபாதி என்பவரை அவரது வீட்டிலேயே வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்துக் கொன்றது. மேலும், மற்றொரு சம்பவத்தில் பஞ்சாபில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் 13 வயது சிறுவனின் காதை கடித்துத் துப்பியது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், அப்போதே பிட்புல் இன நாய்க்குத் தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா வலியுறுத்தியது. அதேபோல சில நகரங்களில் பிட்புல் வகை நாய்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல நாடு முழுக்க பிட்புல் வகை நாய்களுக்குத் தடை அல்லது கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications